பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.10.2021) விடுத்துள்ள அறிக்கை:

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக இசைத்துறை உதவிப் பேராசிரியர் போஸ் என்பவரை முதல்வராக நியமித்து கலைப் பண்பாட்டுத் துறை செயலர் நெடுஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கூடம் ஏ.ஐ.சி.டி.இ. ஏற்பும், புதுவைப் பல்கலைக்கழக அங்கீகாரமும் பெற்ற அரசு கல்லூரியாகும். இக்கல்லூரிக்கு விதிகளுக்கு மாறாக முதல்வரை நியமித்ததால் ஏ.ஐ.சி.டி.இ. ஏற்பும், பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்தாகும் ஆபத்துள்ளது. இதனால், மாணவர்களின் படிப்பு செல்லாததாகிவிடும்.

உதவிப் பேராசிரியர் போஸ் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் பாடல்களைப் பாட மறுத்ததற்காகவும், உயரதிகாரிகளுக்குக் கீழ்படியாமல் ஒழுங்கீனமாக நடந்ததற்காகவும் இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அவருக்கு இரண்டு எச்சரிக்கை மெமோ வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவலின்படி கொரோனா காலத்தில் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்திய போது உதவிப் பேராசிரியர்கள் போஸ், அன்னபூர்ணா இருவர் மட்டுமே நடத்தவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது எனப் பரவலாக செய்தி அடிபடுகிறது. கலைப் பண்பாட்டுத் துறை செயலர் டில்லியில் பணியாற்றிய போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கூட நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை இரண்டையும் பிரித்து தனித்தனி முதல்வர் நியமிக்கப்பட ஆட்சி மன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மாறாக தகுதி இல்லாத, பணிமூப்பில் இளையவரான, பல்வேறு குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை முதல்வராக நியமித்தது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும், ஏ.ஐ.சி.டி.இ மற்றும் யு.ஜி.சி. விதிகளுக்கு முற்றிலும் ஏதிரானது.

பல்கலைக்கூடத்திற்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பல்கலைக்கூட நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை இரண்டையும் பிரித்து தனித்தனி முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து புதுச்சேரி அரசுக்கும், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் பல்வேறு மனுக்கள் அனுப்பியும் சட்டவிரோதமாக முதல்வர் நியமனம் நடந்துள்ளது. அனைத்து ஆதாரங்களையும் திரட்டி மத்திய அரசுக்கும், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம்.

எனவே, பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*