மகளிர் இடஒதுக்கீடு: சமூக அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.03.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உலக மகளிர் தினத்தில் பெண்களுக்குப் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார வரவேற்கிறோம்.

சமூகத்தில் சம பாதியாக உள்ள பெண்களுக்கு அதிகாரத்தில் இடமளிப்பது அவசியம். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்திடும் வகையில் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் இந்த இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்து சமூக நீதியைக் காத்திட வேண்டும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இடஒதுக்கீட்டில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி மற்றும் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் சமூகத்தின் அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு சமநீதி கிடைக்க இந்த கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*