குடியரசுத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்ட பின்பும் குற்றமிழைத்த போஸ் மீது நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 24.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிட்ட பின்னரும் தேச தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்திய பாரதியார் பல்கலைக்கூட விரிவுரையாளர் போஸ் மீது நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

பாரதியார் பல்கலைக்கூட இசைத்துறை விரிவுரையாளர் போஸ் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியையும், தேசத் தலைவர்களான காந்தி, பாரதியார், பாரதிதாசன் ஆகியோரையும் இழிவுப்படுத்தி பேசியுள்ளார். இதுகுறித்து துறை விசாரணை நடந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி அரசு எவ்வித காரணமும் இல்லாமல் இந்த நடவடிக்கையை ரத்து செய்தது.

இதனைக் கண்டித்து அனைத்து சமூக மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் 10.10.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், விரிவுரையாளர் போஸ் மீது நடவடிக்கை கேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 7ந் தேதியன்று குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கு அனைத்து அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 17ந் தேதியன்று புதுச்சேரி தலைமைச் செயலருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்சொன்ன மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்த தகவலை மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டுமென குடியரசுத் தலைவர் அலுவலக அதிகாரி ஜெயராஜன் கூறியுள்ளார்.

ஆனால், இதுநாள்வரையில் போஸ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையின் உத்தரவை புதுச்சேரி அரசு மதிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது. இதுகுறித்து தலைமைச் செயலர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். குற்றமிழைத்த போஸ் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் குப்புசாமி மீது நடவடிக்கை கேட்டு அங்குள்ள விரிவுரையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இவர் வீட்டு வசதி வாரியத்தில் இருந்த போது செய்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகிறார். இதுபோன்ற ஊழல் அதிகாரிகளை புதுச்சேரி அரசு பாதுகாத்து வருகிறது. எனவே, ஊழல் அதிகாரி குப்புசாமியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசை எச்சரிக்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*