புதுச்சேரியில் தனியே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைக்க வேண்டும்: முதலமைச்சரிடம் மனு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.09.2014) புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு அளித்துள்ள மனு:

புதுச்சேரியில் கடந்த 18.08.2011 அன்று சட்டமன்றத்தில் ஆளுநர் இக்பால் சிங் அவர்கள் தனது உரையில் ‘சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக தனியே ஒரு துறையை அமைத்திட எமது அரசு உத்தேசித்துள்ளது’ என அறிவித்துள்ளார். ஆனால், இதுவரையில் அறிவித்தபடி சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனியே அமைக்கப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 1954ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனியே உருவாக்கப்பட்டது. அதற்கென தனியே ஒரு அமைச்சர் மற்றும் அரசுச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளடக்கிய தனித்துறை செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் தனியே நிதி ஒதுக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், புதுச்சேரி அரசைப் பொருத்தவரையில் சமூக நலத்துறையின் கீழ் ஒரு பிரிவாகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சமூக நலத்துறையின் கீழுள்ள பல துறைகளில் இதுவும் ஒன்றாக செயல்பட்டு வருவதால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதிய திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.

எனவே, தங்கள் தலைமையிலான அரசு ஏற்கனவே சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அறிவித்தபடி புதுச்சேரியில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை தனியே உருவாக்க செயல் திட்டத்தினை வரும் பட்ஜெட்டில் அறிவித்து செயல்படுத்த வேண்டுகிறோம். புதுச்சேரியில் பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் கருதி இதனை செய்வீர்கள் என நம்புகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*