ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை செய்தியாளர் மன்றத்தில் 21.04.2015 அன்று, மதியம் 3 மணியளவில், வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை:

சென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலை தேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்புக் காவல்படையால் (APRSASTF – Andhra Pradesh Red Sanders Anti Smuggling Task Force) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களை மட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொல்லப்பட்ட அனைவரும் வேலை தேடிப் போனவர்கள், கைகளில் ஆயுதங்களோடோ, நெஞ்சில் குறிப்பான அரசியல் நோக்கங்களோடோ பயணம் செய்தவர்களல்ல என்பது எல்லாத் தரப்பினர் மத்தியிலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக அனுதாபத்தையும், இதற்குக் காரணமான ஆந்திர காவல்துறையின் மீது கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் பெரிய அளவில் தமிழர்களாகவே இருப்பது தமிழகத்தில் கூடுதலான ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் மீதான குண்டுக் காயங்கள் பெரும்பாலும் மார்புக்கு மேலாகவும், தலையிலும் உள்ளதும், அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டிருப்பதும் இது போலி என்கவுன்டர் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது  எனத் தமிழ் மற்றும் ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் மட்டுமின்றி, சிந்தா மோகன் போன்ற ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கூடக் கண்டிப்பிற்கு உள்ளாகியது.

பேருந்துகளில் சென்று கொண்டிருந்த தமிழ்த் தொழிலாளிகள் இடையில் இறக்கப்பட்டுக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி, சம்பவம்  நடந்த அடுத்தடுத்த நாட்களில் வெளியான போது ஆந்திரக் காவல்துறை முழுமையாக அம்பலப்பட்டது.

ஆந்திரக் காவல்துறையும், அமைச்சரவையும் தமது கொடுஞ் செயலை நியாயப்படுத்தி இன்று பேசிக் கொண்டுள்ளன. அம் மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி ஜே.வி.ராமுடு நடுநிலையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், “போலீசுக்குத் தெரியாதது உங்களுக்குத் தெரியுமோ” என்றெல்லாம் பத்திரிகையாளர்களை நோக்கி ஆத்திரப்பட்டுக் கத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

எனினும் APCLC போன்ற ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்களின் செயல்பாடுகளின் விளைவாக இன்று கொலை செய்த காவல்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த “மோதல்” கொலைகள் தொடர்பான உண்மைகளையும், இதற்குப் பின்னணியாக உள்ள அரசியலையும், தமிழகத் தொழிலாளிகள் இப்படி உயிரையும் பணயம் வைத்து இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதின் பின்னணியையும் ஆய்வு செய்ய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:

உண்மை அறியும் குழு

அ. மார்க்ஸ் – தேசிய மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டியக்கம் (National Confederation of Human Rights Organisations – NCHRO). சென்னை.- 09444120582

கோ. சுகுமாரன் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights), புதுச்சேரி. –  9894054640

பேரா.பிரபா. கல்விமணி –   பழங்குடி இருளர் பாதுகாப்பு இயக்கம், திண்டிவனம். – 09442622970

சீனிவாசன் –  சுற்றுச்சூழல் ஆய்வாளர், சென்னை.- 9840081114

ரமணி- ஜனநாயகத் தொழிற்சங்க மையம்.சென்னை.- 9566087526

முகம்மது தன்வீர் –  தேசிய மனித உரிமைகளுக்கான மக்கள்கூட்டியக்கம் (NCHRO), சென்னை.- 7299924030

தை.கந்தசாமி- தலித் மக்கள் பண்பாட்டுக் கழகம், திருத்துரைபூண்டி – 9486912869

பரிமளா- இளந்தமிழகம் இயக்கம், சென்னை.- 9840713315

சே.கோச்சடை –  மக்கள் கல்வி இயக்கம். – 9443883117

தமயந்தி – வழக்கறிஞர், விடியல் பெண்கள் மையம்,சேலம்.- 9943216762

அப்துல் சமது- மனிதநேய மக்கள் கட்சி,  வேலூர். – 8940184100

விநாயகம்  – மக்கள் விடுதலை இதழ் – 9994094700

சேகர்-  மக்கள் வழக்குரைஞர்  கழகம், திருவண்ணாமலை. – 9789558283

வேடியப்பன் – சமூக செயற்பாட்டாளர், அரூர்- 9443510238

மணியரசன் –  வழக்குரைஞர், செங்கம் – 9442810463

பாரதிதாசன் – இளந்தமிழகம் இயக்கம், சென்னை.

எங்கள் ஆய்வு முறை

என்கவுன்டர் கொலைகள் நடந்த இடங்களுக்கு இப்போது யாரும் செல்ல இயலாது. ஆந்திர அரசின் 144 தடை உத்தரவு கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. தவிரவும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டயாரிடமும் தொடர்புடைய அதிகாரிகள் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனத் தடையும் உள்ளது. இது ஒரு “உண்மையான” மோதல் தான் எனவும், மரம் வெட்டிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாங்கள் இந்த என்கவுன்டரைச் செய்தோம் எனவும் தலைமைக் காவல் அதிகாரி ராமுடு ‘டெக்கான்கிரானிகல்’ இதழுக்கு அளித்துள்ள நேர்காணல் இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் எங்கள் குழு ஏப்ரல் 17, 18 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்திலுள்ல படவேடுக்கு அருகில் உள்ல மலையடிவாரக் கிராமங்கள்; திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள ஜமுனாமருதூர் ஒன்றியதிலுள்ள நம்மியம்பாடியை ஒட்டியுள்ள மலைக் கிராமங்கள்; தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையிலுள்ள அரம்பட்டு மற்ரும் அதை ஒட்டியுள்ள கிராமங்கள் ஆகியவற்றிற்குக்  சென்று பல தரப்பினரையும் சந்தித்தது. கொலையுண்ட 20 பேர்களில் மெலக்கணவாயூர் பன்னீர்செல்வம், கல்லுக்காடு சசிகுமார் தவிர அனைவரது குடும்பத்தினரையும் சந்தித்து விரிவாகப் பேசியது. அவர்களின் குடும்ப நிலை, அவர்களது வாழ்நிலை, அவர்களின் கிராமங்களின் நிலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தது.  முன்னதாக எம் குழு உறுப்பினர்களில் விநாயகம், வேடியப்பன் முதலானோர் பலமுறை இப்பகுதிகளுக்குச் சென்று கொலையுண்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வந்தனர்.

இந்தச் சம்பவம் மற்றும் இதன் பின்னணி தொடர்பான  ஊடகக் கட்டுரைகள், இணையப் பதிவுகள், வன உரிமைச் சட்டங்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம். பழங்குடியினர் பகுதிகள்  பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் செயல்படும் விதங்களையும் ஆய்வு செய்தோம்.

செம்மரக் கடத்தலின் பின்னணி, அரசியல் குறித்தும், இது தொடர்பாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் முன்னதாக வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகளில் கண்டுள்ள தகவல்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

ஏப்ரல் 7 சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும்

காலை 10 மணி வாக்கில் திருப்பதியை ஒட்டிய சேஷாசலம் காடுகளில் “செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த” 20 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி காட்சி ஊடகங்களில் வெளிவந்து அதிர்ச்சியை விளைவித்தது. கைது செய்ய முயன்றபோது இவர்கள் தாக்கியதாகவும் அதனால் டி.ஐ.ஜி காந்தாராவ் தலைமையில் வந்த சிறப்புக் காவற்படையினர் (APRSASTF) மரம் வெட்டிக் கொண்டிருந்த ‘கடத்தல்காரர்களைத் தற்காப்பிற்காக”த் சுட்டுக் கொன்றதாக ஆந்திரத் தரப்பில் சொல்லப்பட்டது. எனினும் இது தற்காப்புக்காகக் கொல்லப்பட்டதல்ல, குண்டுக் காயங்கள் இடுப்புக்கு மேலாகவே உள்ளன என்கிற தகவல்களை விரிவான ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.

அடுத்தடுத்த நாட்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மூட்டைகளாகக் கட்டப்பட்டுத் தமிழகக் காவல்துறையின் உதவியுடன், கொல்லப்பட்டவர்களின்  உறவினர்களிடம் சேர்ப்பிக்கப்படன. உடல்களோடு இறப்புச் சான்றிதழ் ஒன்றும், அத்துமீறி நுழைந்தது,  தடைசெய்யப்பட்ட இயற்கை வளங்களைக் கொள்ளை கொண்டது, தடுக்க வந்த அரசுப் படையினரைக் கொலை செய்ய முயன்றது முதலான குற்றங்களைக் கொலையுண்டவர்களின் மீது சுமத்திய முதல் தகவல் அறிக்கைப் பிரதி ஒன்றும் உறவினர்களிடம் அளிக்கப்பட்டன.

கொல்லப்பட்டவர்களின் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  படவேடு (7 பேர்)

காந்தி நகர் எஸ்.மகேந்திரன் (22), முருகப்பாடி ஜி.மூர்த்தி (38), ஜி.முனுசாமி (35),  நுளம்பை கே.பெருமாள் (37),வேட்டகிரிபாளையம் கே.சசிகுமார் (34),  முருகன் (38), கலசமுத்திரம் வி.பழனி (35). (போயர் வகுப்பைச் சேர்ந்த கலசமுத்திரம் பழனியின் உடல் வந்த அன்றே எரிக்கப்பட்டது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களின் உடல்கள் மறு பிரேத பரிசோதனைக்குப் பின் புதைக்கப்பட்டன).

திருவண்ணாமலைமாவட்டம் ஜமுனமரத்தூர் (5 பேர்)

மேலக்கணவாயூர் ஆர்.பன்னீர்செல்வம் (22), மேல்குப்சானூர் (நம்மியம்பட்டு) எஸ். கோவிந்தசாமி (42), கோ.ராஜேந்திரன் (30), சி.சின்னசாமி (48) ,வி.வள்ளிமுத்து(18), (இந்த ஐந்து மலையாளிப் பழங்குடியினரின் உடல்களும் புதைக்கப்பட்டன) தருமபுரி மாவட்டம், சித்தேரி மலை (7 பேர்) அரசநத்தம் வி.ஹரிகிருஷ்ணன் (52), எம்.வெங்கடேசன் (23), எஸ்.சிவகுமார் (25), டி.லட்சுமணன் (23), எல். லட்சுமணன் (46), ஆலமரத்து வளவு ஏ.வேலாயுதம் (25). கருக்கன்பட்டி பி.சிவலிங்கம்(42). ( இந்த அய்ந்து மலையாளிப் பழங்குடியினரின் உடல்களும் அன்றே எரிக்கப்பட்டன எரிக்க வேண்டும் என ரெவின்யூ மற்றும் காவல்துறை அதிகாரிகள் தம்மை வற்புறுத்தியதாக கொல்லப்பட்ட வேலாயுதத்தின் தம்பி ராமமூர்த்தி கூறினார்). சேலம் மாவட்டம்,வாழப்பாடி வட்டம், கல்வராயன் மலை (ஒருவர்), கல்லுக்காடு ச.சசிகுமார், (பழங்குடியினரான இவரது உடலும் அன்றே எரிக்கப்பட்டது).

கொல்லப்பட்ட நிகழ்வு குறித்துகொல்லப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டி ஆந்திர காவல்துறை பதிந்துள்ள முதல் தகவல்அறிக்கையின் விவரம்: 

திருப்பதி மாவட்டம், சந்திரகிரி காவல் நிலையம், மு.த.எண்: 42/2015, தேதி: ஏப்ரல் 7, 2015 ;

குற்றப் பிரிவுகள்: 147,148,307,332 r/w 149 இ.த.ச மற்றும் ஆந்திர மாநிலவனச் சட்டப் பிரிவுகள் 20(1), (2), (3), (4), 44 மற்றும் Biological Diversity Act பிரிவுகள் 7, 24(1), 55.

சம்பவம் நிகழ்ந்த நேரம்: ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை காலை 5.30 முதல் 6.00 மணிக்குள்.

தொடர்ந்த நிகழ்வுகள்:

20 பேர்களும் சேஷாசலம் காட்டில் இரு இடங்களில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டதாக ஆந்திர காவல்துறை கூறியது. ஒரு இடத்தில் 9 பேரின் உடல்களும் இன்னொரு இடத்தில் 11 பேர்களின் உடல்களும் கிடத்தப்பட்டு ஊடகங்களுக்குக் காட்டப்பட்டன. உடல்களுக்கு இடையில் அவர்களால் ‘வெட்டப்பட்ட’  செம்மரத் துண்டுகள் எனச் சிலவற்றையும் ஆங்காங்கு போட்டிருந்தனர். அப்படிக் கிடந்தவற்றில் பொறிக்கப்பட்டிருந்த எண்கள் அவை முன்னதாகவே வெட்டப்பட்டவை என்பதைக் காட்டுவதை ஊடகங்கள் சுட்டிக் காட்டின.

மேலே குறிப்பிட்டவாறு உறவினர்களிடம் சேர்க்கப்பட்ட பழங்குடியினரின்  உடல்களில் எட்டு எரிக்கப்பட்டன. ஐந்து உடல்கள் புதைக்கப்பட்டன. அடிவாரத்தில் வாழ்ந்தவர்களில் பழனியின் உடல் மட்டும் எரிக்கப்பட்டது. வன்னியர்கள் நீதி வேண்டும் எனச் சாலை மறியல் செய்தனர். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பா.ம.க நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக அடிவாரத்தைச் சேர்ந்த பிற ஆறு பேர்களின் உடல்கள் இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவிலிருந்து வந்த மருத்துவர்களால் மறு பரிசோதனை செய்யப்பட்டபின் புதைக்கப்பட்டன. மறு பரிசோதனை அறிக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம்ஆந்திர காவல்துறையின் ‘என்கவுன்டர்’ கதை குறித்த வேறு சில கூடுதல் தகவல்கள் வெளிவர வாய்ய்ப்புள்ளது.

இதற்கிடையில் மோதலின்போது தற்காப்புக்காகத்தான் சுட வேண்டியதாயிற்று என ஆந்திரக் காவல்துறை சொல்வதற்கு எதிரான ஒரு மிக முக்கிய ஆதாரம் மேலுக்கு வந்தது. கொல்லப்பட்டவர்களில் சித்தேரிமலை மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஏழு பேர்களும் திருப்பதி செல்லும் வழியிலேயே ஆந்திரப் போலீசால் கடத்திச் செல்லப்பட்ட செய்திதான் அது. ஆந்திர எல்லையில் உள்ள நகரி புதூர் என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி அவர்கள் இறக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதை நேரடி சாட்சியங்கள் இன்று நிறுவுகின்றன.

நடந்தது இதுதான். எங்களது விசாரணையும் இதை உறுதிப்படுத்தியது. மரக் கடத்தல் மாஃபியாவின் உள்ளூர் ஏஜன்டான புதூர் வெங்கடேசன் என்பவர் மூலம் மரம் வெட்டுவதற்கென அழைத்துச் செல்லப்பட்ட ஒரு குழுவில் ஒன்பது பேர்கள் இருந்துள்ளனர். தற்போது கொல்லப்பட்டுள்ள படவேடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பழனி ஆகியோர் மூலமாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில், சித்தேரிமலையிலிருந்து சனிக்கிழமை (ஏப் 4) மாலையே புறப்பட்டு வந்த குழு அது. ஜவ்வாதுமலையில் வந்து தங்கிப்பின் ஞாயிறு மதியம் அவர்களைக் கண்ணமங்கலம் கொண்டு வந்து அங்கிருந்து பேருந்தில் திருத்தணி வழியாக ரேணிகுண்டா கொண்டு செல்வது ஏஜன்டுகளின்  திட்டம். இக்குழுவில் தற்போது உயிர் பிழைத்துள்ள படவேட்டைச் சேர்ந் சேகர் (45), சித்தேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோரும் இருந்துள்ளனர்.

இவர்களில்பாலச்சந்திரன் தன் நண்பர் ஒருவருடன் கண்ணமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றதால் மற்றவர்களோடு பஸ் ஏற இயலாமற் போயிற்று. அந்தக் குழுவில்அவரது தந்தை அரிகிருஷ்ணனும், மைத்துனன் சிவகுமாரும் இருந்துள்ளனர். போதை தெளிந்த பாலச்சந்திரன் அந்தக் குழுவில் இருந்த சிவக்குமாரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் நகரி புதூரில் ஆந்திரக் காவலர்களால் இறக்கி அழைத்துச் செல்லப்படுவது தெரிந்தது. பின் அவர் ஊருக்குத் திரும்பினார். பாலச்சந்திரனின் சகோதரன் பிரபாகரன் இவற்றைவிரிவாக எங்களிடம் விளக்கினார்.

ரேணிகுண்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து நகரி புதூரில் நிறுத்தப்பட்டு ஆந்திர போலீசாரால் அக்குழுவில் இருந்த எட்டு பேர்களில் ஏழு பேர்கள் இறக்கப்பட்டனர். அவர்களை இறக்கியபோது யாரோ ஒரு பெண்ணருகில் அமர்ந்து சென்று கொண்டிருந்த சேகரை அப்பெண்ணின் கணவர் என நினைத்துக் கொண்டு விட்டு விட்டு மற்ற ஏழு பேர்களை மட்டும் ஆந்திரக் காவலர்கள் அழைத்துச் சென்றனர். சேகர் அடுத்தநிறுத்தத்தில் இறங்கி திருத்தணி செல்லும் பேருந்தைப் பிடித்துத் தப்பித்து வந்துள்ளார்.

இப்படி வெவ்வேறு பேருந்துகளில் வந்துள்ள பலரும் அன்று, அதாவது திங்கள் மாலை வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பன்னீர்செல்வமும் இப்போது தப்பியுள்ள இளங்கோவும் ஒரு ஆட்டோவில் வந்தபோது பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு சென்று வைத்திருந்த இடத்திலிருந்து மங்கலான வெளிச்சத்தில் தப்பி ஓடி வந்துள்ளார் இளங்கோ.

ஆந்திரகாவல்துறையின் என்கவுன்டர் கதையைப் பொய்யாக்கும் வலுமிக்க சாட்சியமாக இன்று சேகர், பாலச்சந்திரன், இளங்கோ ஆகியோர் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த ‘பீப்பிள்ஸ் வாட்ச்’அமைப்பு இம்மூவரையும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன் நிறுத்தி நடந்த உண்மைகள் குறித்த வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளது. இளங்கோ முதலானோர் சொல்வதிலிருந்து அன்று இவ்வாறு ஆந்திரக் காவல்துறையால் கடத்திச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20ஐத் தாண்டும் எனத் தெரிகிறது. மற்றவர்களின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது.

இதற்கிடையில் ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் தொடுத்த வழக்கொன்றின் ஊடாக இன்று ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புச் சிறப்புப் படையினர் மீது ஆட்களைக் கடத்தியது, கொன்றது ஆகிய குற்றங்களைச் சுமத்தி இரு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.

மகேந்திரன், கல்லுக்காடு சசிகுமார் ஆகியோர் தவிர பிற அனைவரது வீடுகளுக்கும் எங்கள் குழுவினர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி வாக்குமூலங்களையே அளித்தனர். தற்போது கொல்லப்பட்டவர்கள் யாரும் மரம் வெட்டப் போகவில்லை என உறுதிபடக் கூறினர். இதுவரை அவர்கள் மரம் வெட்டும் வேலைக்குச் சென்றதே இல்லை எனவும் உறவினர்களும் மற்றவர்களும் கூறுகின்றனர். பெயின்ட் அடிப்பது, கட்டிடவேலையில் கலவை போடுவது, காப்பிக் கொட்டை பறிப்பது, மேஸ்திரி வேலை செய்வது  முதலான வேலைகளுக்காகத்தான் அடிக்கடி இப்படிப் பல நாட்கள் வெளியூர் செல்வார்கள் எனச் சொன்னார்கள். வேட்டகிரிபாளையம் சசிகுமார், முருகன் ஆகியோரது வீடுகளில் அவர்கள் பெயின்டிங் செய்யப் பயன்படுத்தும் கருவிகள், வண்ணக்கறை படிந்த சட்டைகள் ஆகியவற்றையும் காட்டினர். மரம் வெட்டப் போவதில்லை எனில் பின் எதற்காக அன்று திருப்பதிப் பக்கம் சென்றனர் என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை. கொலை நடந்த அடுத்தடுத்த நாட்களில் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டிகளில் இவர்களில் சிலர் மரம் வெட்டப் போனதாகச் சொல்லியுள்ளதையும் நாம் மறந்துவிட இயலாது.

செம்மரம் வெட்டிக் கடத்தல்காரர்களுக்கு உதவுவது குற்றம் என்பதால் அதற்காகப் போனவர்களைச் சுட்டது சரிதானே என நாம் நினைத்து விடுவோமோ என அந்த அப்பாவி மக்கள் அச்சப்படுவது விளங்கியது. அதோடு அவர்கள் எல்லோரும் முழு நேரமாக மரம் வெட்டுவதையே தொழிலாகக் கொண்டவர்களும் அல்ல. கடும் வறுமை, கடன் தொல்லை, வட்டி கட்ட இயலாமை, மழை இல்லாமை, பஞ்சம் ஆகியவற்றால் அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத தருணங்களில், கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ளவர்களாக அவர்கள் உள்ளனர். எவ்வளவு உயிர் ஆபத்து உள்ள வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற நிலையில் உள்ளனர். பலர் கேரளா, கர்நாடகம் முதலான மாநிலங்களில் குறைந்த ஊதியத்திற்குப் பல மாதங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கின்றனர். தவிரவும் இவர்களை அழைத்துச் செல்லும் ஏஜன்டுகள் வெட்டப் போகும் மரங்கள் அரசு அனுமதியுடன் வெட்டப்படுகின்றன என்றோ, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துச் சரி கட்டியாகிவிட்டதால், பிரச்சினை  ஏதும் இருக்காது என்றோ பொய் சொல்லியும் அழைத்துச் செல்லுகின்றனர். ஒரு சிலர் மரம் வெட்டுவதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை எண்ணியும் இந்த ஆபத்தான வேலைகளுக்குச் செல்லுகின்றனர்.

இவர்களில் ஆசிரியர் பயிற்சி முடித்த பழனி, அஞ்சல் வழிக் கல்வியில் பட்டம் பயிலும் மகேந்திரன் தவிர மற்றவர்கள் அதிகம் படிக்காதவர்கள். பழங்குடி மலையாளிகளில் பலர் படிக்காதவர்கள். ஒரு சிலருக்கு செல்போன்களைக் கூடப் பயன்படுத்தத் தெரியாது என அவர்களின் உறவினர்கள் கூறினர். கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் 40 வயதுக்குக் குறைந்தவர்கள். இன்று கணவரை இழந்துள்ள பெண்கள் பலரும் 30 வயதுக்கும் குறைந்த இளம் வயதினர். சிலர் 2வவயதுக்கும் குறைந்தவர்கள். இவர்கள் எல்லோரும் ஒரே குரலில் சொன்ன இன்னொரு விடயம் கொல்லப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட தம் உறவினர்களின் உடல்கள் யாவும் கடுமையாகச் சிதைக்கப்பட்டும் தீக்காயங்களுடனும் இருந்தது என்பதுதான்.

மலைவாழ் பழங்குடியினரைப் பொறுத்தமட்டில் அவர்கள் முழுவதும் மழையை நம்பியே வாழ்கின்றனர். யாரிடமும் போதுமான அளவு நிலம் இல்லை. பலரும் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலங்களையே கொண்டுள்ளனர். சில புளியமரங்கள், பலா மரங்கள். ஆங்காங்கு கண்ணில் படுகின்றன, மழைநீரைத் தேக்கி வைக்க சிறு அணைகளோ, குளம் குட்டைகளோ இல்லை. மழை வந்தால்தான் சாகுபடி. விளையும் பொருட்களை அங்கேயே கொள்முதல் செய்ய அரசு எந்த வழியையும் செய்யவில்லை. மலைக்குச் செல்ல சாலை வசதிகள் போதிய அளவில் இல்லை. சித்தேரி மலையில் அடிவாரத்திலிருந்து (வாச்சாத்தி) மேலே செல்ல முறையான சாலையே இல்லை. நாங்கள் சென்ற ஸ்கார்பியோ வண்டி ஒரிடத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டது.

சித்தேரிமலையில் பழங்குடியினருக்குப் பொதுச் சுடுகாடு கூடக் கிடையாது, தற்போது கொல்லப்பட்ட எட்டு பேர்களும் அவரவரின் சொந்த நிலங்களிலேயே எரிக்கப்பட்டுள்ளனர்.

பழங்குடியினர் நலத் துறையின் கீழ் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் உரிய எண்ணிக்கையில்ஆசிரியர்கள் இல்லை. நம்மியம்பாடி மேலக்குசானூரில் உள்ள ஒரு உண்டு உறைவிடப்பள்ளியில் 60 மாணவர்கள் உள்ளனர். ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வாட்ச் மேன், ஒரு சமையற்காரர் மட்டுமே உள்ளனர். தலைமை ஆசிரியர்தான் வார்டன் வேலையையும் செய்ய வேண்டும். சித்தேரி மலையில் அரசநத்தத்திற்கு அருகில் உள்ள ஒரு பள்ளியில் 172 மாணவர்கள் உள்ளனர். அது ஒரு நடுநிலைப் பள்ளி. இரண்டே ஆசிரியர்கள்தான் உள்ளனர்.

போதிய மருத்துவமனைகளும் கிடையாது. இருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. 99 சதப் பிரசவங்கள் இன்னும் வீடுகளிலேயே நடக்கின்றன. பிரசவம் முடிந்த பிறகு மருத்துவமனையில் கொண்டு வந்து பதிந்து அழைத்துச் செல்கின்றனர். முத்துலட்சுமி ரெட்டி பெயரில் வழங்கப்படும் 12,000 ரூபாய் உதவித் தொகையைப் பெறுவதற்காகவே இப்படிச் செய்கின்றனர். குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி போதிய சத்துணவு கிடைப்பதில்லை. குழந்தை இறப்பு வீதம் இங்கு அதிகம் என்கிறார் இப்பகுதியில் UNICEF ஆய்வாளராகப் பணி செய்யும் டாக்டர் வித்யாசாகர். நம்மியம் பாடியில் வயதானவர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. எல்லோரும், குறிப்பாகப் பெண்கள் சோகை பிடித்தவர்களாகவும் இளைத்தும் காணப்பட்டனர். டாக்டர் பினாயக் சென் குறிப்பிடுவதுபோல எல்லாப் பழங்குடி மக்களையும் போலவே  இப்பகுதிப் பழங்குடி மக்களுக்கும் உயரத்திற்கேற்ற நிறையும் பருமனும் இல்லை. போதிய சத்துணவு இல்லாமையே இதன் காரணம்.

வன உரிமைச்சட்டம் 2006 என்பது வனத்தை நம்பி வாழ்பவர்களுக்குப் பல உரிமைகளைத் தருகிறது. தமிழக அரசு அப்படி ஒரு சட்டம் இருப்பதைக் கண்டு கொள்வதே இல்லை. பிற மாநிலங்களில் சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1.5 மில்லியன் மலைவாழ் மக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளன என்கிறார் வனச் சட்டம் 2006-ஐ உருவாக்கிய குழுவில் இருந்த பிஜோய்.  தமிழகத்தில் அச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்பதோடு, திட்ட ஒதுக்கீடுகளில் பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியும் கூடப்பிற துறைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வன உரிமைச் சட்டம் பயன்பாட்டில் இல்லாததன் விளைவாக இன்று வனத்துறை அதிகாரிகள் இம்மக்களைத் தொல்லை செய்வதற்கும் வழியாகிவிடுகிறது.

இதழாளர் ஒருவர், “சரி பஞ்சத்தின் விளைவாக உங்களின் கடைசி மாட்டையும், இருந்த பனை மரங்களையும் விற்று விட்டீர்கள். இந்தப் பணம் தீர்ந்தவுடன் என்ன செய்வீர்கள்?” எனக்கேட்டபோது இப்பகுதிப் பழங்குடி ஒருவர், “காப்பாதுறவன் வருவான்” எனச்சொல்வது சில நாட்களுக்கு முன் ஒரு இதழில் வெளியாகி இருந்தது. ஆமாம், செம்மரக்கடத்தல் மாஃபியாக்களின் ஆள் பிடிக்கும் ஏஜன்டுகளாகச் செயல்பட்டுத் தங்களைக் கடுமையானதும் ஆபத்தானதுமான பணிகளில் ஈடுபடுத்துவோர் இப்படிக் காப்பாற்ற வந்தவர்களாகத் தோற்றமளிக்கும் காட்சிப் பிழை ஒன்று இங்கே நிகழ்கிறது. இது இந்தஅரசப் புறக்கணிப்புகளின் விளைவுதான் என்பதை மறந்து விடக் கூடாது.

இவர்களின் கடும்உழைப்பின் மூலமும், இவர்களின் உயிர்களைப் பணயம் வைத்தும்  கோடி கோடியாய்க் கொள்ளை அடிக்கும் மாஃபியாக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பல மட்டங்களில் செம்மரக் கடத்தல் தொழில் செயல்படுகிறது. ஒரு மட்டத்திற்கும் இன்னொன்றிற்கும் இடையில் உள்ள தொடர்பு அவ்வளவு துல்லியமானதல்ல. யாருக்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்பது கீழே உள்ளவர்களுக்குத் தெரியாது. தொடர்புக் கண்ணியைத் தொடர்ந்து கொண்டே வந்தால் அது எங்கோ ஒரு புள்ளியில் அறுந்து போகும்.

தங்கள் கிராமத்திற்குள்ளேயே யாரோ ஒருவருக்குச் சேதி வரும்.  நடந்து முடிந்த கொடுமையில்பழனி அல்லது மகேந்திரன் சொல்லித்தான் சித்தேரி மலையிலிருந்து ஜமுனாமருதூருக்கு வந்துப் பின் கண்ணமங்கலம் சென்று பேருந்து ஏறியதாக இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் பழனி, மகேந்திரன் இருவருமே இன்று கொல்லப்பட்டுள்ளனர். புதூர் வெங்கடேசன் என இன்னொரு ஏஜன்ட் மூலம்தான் இந்த இருவருக்கும் அல்லது இவர்களில் யாரோ ஒருவருக்கும் மேலிருந்து செய்தி வந்துள்ளது.

இவர்களை அழைத்துச் செல்லும் வழியும் அவ்வப்போதுதான் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களும் கூடச் சில நேரங்களில் கையாட்களாக உள்ளனர். குறிப்பிட்டஇடத்திலிருந்து இவர்கள் வன ஓரங்களுக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள உள்ளூர் அடித்தள மக்களின் (பெரும்பாலும் தலித்கள்) வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். பின் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றியோ, இல்லை வாகனம் செல்ல இயலாத இடங்களில் நீண்ட நடைப்பயணம் மூலமாகவோ ஒரு ‘பைலட்’ அவர்களை செம்மரக் காடுகளுக்குக் கொண்டு செல்கிறான். அங்கே இவர்களுக்குக் கொஞ்சம் உணவும் கருவிகளும் வழங்கப்படுகின்றன. வெட்டிய மரங்களைத் துண்டுகளாக்கி சுமார் 25 கிலோ எடையை தலையில் சுமந்து நீண்ட தூரம் நடந்துவந்து  சேர்ப்பித்து அவர்கள் அகல வேண்டும். அதற்குப் பின் கடத்தல் கண்ணி அவர்களைப் பொறுத்தமட்டில் அறுந்து விடுகிறது. ஊதியத்தைக் கூட அவர்கள் ஊருக்குத் திரும்பி வந்து தங்களை அனுப்பிய ஏஜன்டிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பல நேரங்களில் பேசிய தொகையைக் கொடுப்பதில்லை.

இந்த மரங்கள் பின்னர் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியே கொண்டு செல்வது இன்னொரு மட்டத்தில் நடைபெறும் வேலை. பத்துடன் மரத்தை வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால் அவை எட்டு லாரிகளில் ஏற்றப்படும். இன்னொரு இரண்டு லாரிகளில் ஒரு டன் மரம் ஏற்றப்பட்டு அவை மட்டும் வழியில் சோதனையில் “பிடிபடும்”.  காவல்துறை, வனத்துறை உரிய அமைச்சு எல்லாவற்றிற்கும் இதற்கான காணிக்கைகள் செலுத்தப்படும். பழங்கள் என்றோ, காய்கறிகள் என்றோ இன்வாய்ஸ்களும் பிற ஆவணங்களும் பெறப்படும்.

இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட மரங்களை வெளி நாட்டுக் கடத்தல்காரர்களுடன் பேரம் பேசி அனுப்புவது இன்னொரு மட்டத்தில் நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக இருந்து மாஃபியா கும்பல் பணத்தை விசிறி அடித்து வேலை முடித்து லாபத்தை அள்ளும்.

ஒரு இயற்கை வளப் பாதுகாப்புச்செயல்பாடு சமூக அரசியல் பிரச்சினையாக மாறிய கதை

திருப்பதி மற்றும் கடப்பா மாவட்டங்களை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ள இந்த செஞ்சந்தன மரங்கள் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. நெல்லூர், கர்நூல் மாவட்டங்களிலும் இவை சிறிதளவு உண்டு. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் எனவும் இது கூறப்படுகிறது. 2009ல் கிலோ 100 ரூபாயாக இருந்த இம்மரம் இன்று கிலோ 2000 ரூபாய். வாசனையற்ற இச்சந்தன மரம் சீனா, ஜப்பான், பர்மா முதலான பவுத்த நாடுகளில் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்காகவும், மருந்துக்காகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் பெரிதும் விரும்பப்படுகிறது. இதனுடைய அசாத்தியமான சிவப்பு வண்ணம் இதன் சிறப்பு. இந்த மரத்தை ‘அழியும் உயிரிகளில்’ (endangered species) ஒன்றாக “இயற்கைப் பாதுகாப்பிற்கானபன்னாட்டு ஒன்றியம்” (IUCN) 2000த்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்புத்தான் மாஃபியாக்களின் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பியது. இம்மரத்தைக் கடத்தி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிட்டால் நூறு மடங்குவரை லாபம் கிடைக்கும். அழியும் உயிரி என்பது இந்த வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை உருவாக்குகிறது. கட்டுப்பாடுகள் மிகும்போது அவற்றை மீறுவதால் விளையும் பயன்களும் அதிகமாகின்றன; ஆபத்துக்களும் அதிகமாகின்றன. பயன்களை இந்த வணிகத்தில் மேல் அடுக்கில் உள்ள  மாஃபியாக்களும், ஆபத்துகளைக் கீழடுக்கில் உள்ள மரம் வெட்டிகளும் எதிர் கொள்கின்றனர்.

மிகப் பெரிய அளவில் இன்று ஆந்திர மாநில அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியாக இந்த மாஃபியாக்கள் உள்ளனர். இன்று மொரீஷியசில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள கொல்லம் காங்கி ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கிய புள்ளிகளில் ஒருவன். முந்தைய முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டியின் சகோதரன் கிஷோர் குமார் ரெட்டி இன்னொரு செம்மரக் கடத்தல் மாஃபியா தலைவன்.

சந்திரபாபு நாயுடு கட்சியிலும் செம்மர மாஃபியாக்கள் இருந்த போதிலும் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்கள் தெலுங்கு தேசம் கட்சியின் பலவீனமான பகுதிகளாகவே உள்ளன. சென்ற தேர்தலிலும் கூட இக்கட்சி இவ்விரு மாவட்டங்களிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. சென்ற ஆண்டு, சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற கையோடு, பதவி ஏற்பதற்கு முன்னதாகவே உயர்காவல்துறை அதிகாரிகளைக் கூட்டி அடுத்த பத்து நாட்களுக்குள் செம்மரக் கடத்தலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என ஆணையிட்டார். காவல்துறையிலுள்ள காங்கிரஸ் ஆதரவாளர்களையும் சேஷாசலம் காட்டுப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய ஆணையிட்டார்.

நவம்பர் 2014 ல் “ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் படை(APRSASTF)” உருவாக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் சென்ற பிப்ரவரியில் இதன் தலைவராக டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் நியமிக்கப்பட்டார். இன்று இருபது தமிழர்களைக் கொன்றது இவரது தலைமையில் இயங்கிய படைதான்.

நாயுடு எதிர்பார்த்தது நடந்தது. காங்கிரஸ் ஆதரவு செம்மரக் கடத்தல் மாஃபியாக்கள் அவர் பக்கம் பணிவு காட்டத் தொடங்கினர்.

தமிழக எல்லையோர மாவட்டமான வேலூரிலும் கூட செம்மர மாஃபியாக்களின் செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது. வேலூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் கரகாட்டக்காரரான மோகனாம்பாளிடமிருந்து 4.4 கோடி ரூ பணமும் 72 பவுன் நகைகளும்  கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். இவை செம்மரக்கடத்தல் மூலமாகச் சம்பாதித்தவைதான். ஆந்திராவிலும் தமிழகத்திலும் இந்த அம்மைக்கு 30 வீடுகள் உண்டு. சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்காட்டில் கைப்பற்றப் பட்ட 32 லட்ச ரூபாய்களுங் கூட செம்மரக் கடத்தலின் ஊடாகக் கிடைத்ததுதான் எனச் சொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

சென்ற ஆண்டு மத்தியில் ஆந்திரக் காவல்துறை ஏழு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இவர்கள் அனைவரும் அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த வன்னிய இனத்தவர்கள்.

சிறப்புப் படை அமைத்து வேட்டையாடுவது ஆந்திர மாநிலத்தின் உள் அரசியலானாலும் கொல்லப்படுபவர்கள் எல்லோரும் செம்மரக் கடத்தற் கண்ணியில் கீழ் மட்டத்தில் உள்ள தமிழக மரம் வெட்டிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது, வெட்டும் திறன் நுணுக்கமாக வாய்க்கப்பட்டுள்ளவர்கள் என்கிற வகையில் அதிக அளவில் தமிழர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற போதிலும் கொல்லுவது என முடிவெடுக்கும்போது பல்வேறு நிலைகளில் அவர்களுடன் இருந்து பணி செய்யும் உள்ளூர் மக்கள் கவனமாக விலக்கப்பட்டுத் தமிழர்களே பொறுக்கி எடுத்துக் கொல்லப்படுகின்றனர். உள்ளூர் அடித்தள மக்களைக் கொன்றால் பெரிய அளவில் அரசியல் எதிர்ப்புகள் வரும்; தமிழர்களைக் கொன்றால் அப்படியான பிரச்சினை இருக்காது என்பதால்தான் இப்படி ஆகிறது எனச் சென்ற ஆண்டு ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டபோது இதை ஆய்வு செய்த ஒரு உண்மைஅறியும் குழு (NCDNTHR and HRF) குறிப்பிட்டது நினைவிற்குரியது.

கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் வாடும் தமிழர்கள்

நாங்கள் சென்றிருந்த மூன்று பகுதிகளிலும் அடிக்கடி இவ்வாறு மரம் வெட்டப் போகிறவர்கள் கொல்லப்பட்டு உடல்கள் கொண்டு வரப்படுகிறதா எனக் கேட்டபோது எல்லோரும் இல்லை என மறுத்தனர். யாரும் காணாமல் போயுள்ளார்களா எனக் கேட்டபோது சித்தேரி மலையில் அப்படி ஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் எனச் சொல்லப்பட்டது.

சென்ற டிசம்பர் 2013ல் ஸ்ரீதர் ராவ், டேவிட் கருணாகர் என்கிற ஆந்திர வனத்துறை அதிகாரிகள் இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஸ்ரீதர் ராவ் மிக்க நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இதற்குப் பிரதியாகவே சில தமிழர்கள் 2014 மத்தியில் கொல்லப்பட்டனர் என்றொரு பேச்சுண்டு. ஆனால் மிகவும் நேர்மையாக நடந்த இந்த அதிகாரிகள் சரிப்பட்டு வரவில்லை என்பதால் அதிகாரத்தில் உள்ளவர்களே இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு.

இது தவிர இந்த அதிகாரிகள் கொல்லப்பட்டதற்காக ஏராளமான தமிழர்கள் இன்று கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் வாடுகின்றனர். அரசநத்தம், கலசப்பாடி முதலான ஊர்களில் மட்டும் சி.முருகேசன், ஆ.காமராஜ், த.சத்தியராஜ், ரா.தர்மன், கோ.வெங்கடாசலம், ரா.மகேந்திரன், ரா.சிவலிங்கம், அ.கோவிந்தசாமி, கு. ஆண்டி ஆகியோர் இன்று ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இதில் முதல் அறுவர் பிணை விடுதலை இன்றி ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில்உள்ளனர்.

வெங்கடாசலத்தின் (35) மனைவி மகேஸ்வரி (30), தருமன் மனைவி அலமேலு மற்றும் லட்சுமி, ராதிகா ஆகிய பெண்களிடம் நாங்கள் பேசினோம். எல்லோருமே தங்கள் கணவர் குடும்பத்தோடோ தனியாகவோ திருப்பதிக்கு சாமிகும்பிடப் போனபோது அவர்கள் தமிழில் பேசியதைக் கவனித்து அங்குள்ள ஆந்திர போலீஸ் அவர்களைக் கைது செய்து கொண்டு சென்றது என்றனர்.

அலமேலுவின் கணவர் மனைவி, குழந்தைகள், சகோதரன் உட்படத் திருப்பதி சென்று வணங்கிவிட்டுக் கீழ்த் திருப்பதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். தன் கணவரும் கொழுந்தனும் சாலையைக் கடந்து தேநீர் அருந்தச் சென்ற போது யாரோ மூவர் வந்து அவர்களிடம் ஏதோ கேட்டுள்ளனர். தமிழில் பதில் சொன்னவுடன் அவரை இழுத்துச் சென்றுள்ளனர்.

வழக்குரைஞர்களை வைத்து அணுகிய போதுதான் அவர் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முதலில் கடப்பா சிறையிலும் இன்று பாலூர் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மேல்குப்சானூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் தான் எவ்வாறு குடும்பத்தோடு திருப்பதி சென்றபோது இதே வடிவில் கைது செய்யப்பட்டார் என்பதையும், பின் ஏதேதோ சொல்லித் தப்பித்து வந்ததையும் விளக்கினார்.

வன அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 430 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும், இவர்களில் 30 பேர்கள் முதலிலும், பின்னர் 70 பேர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் எனவும் மகேஸ்வரி கூறினார். பிணையில் விடுதலையான இந்த 100 பேரும் ஆந்திரர்களாம். சிறையிலுள்ள 330 பேர்களும் தமிழர்களாம். கடப்பாவில் உள்ள சலபதி என்பவர்தான் இவர்களின் வழக்குரைஞர். அவரைக் கேட்டால், “தமிழர்களுக்குப் பிணையில் விடுதலை தரமாட்டாங்க. விட்டால் ஓடிப் போயிடுவாங்க” எனச் சொல்கிறாராம். இதுவரை ஒவ்வொருவரும் 22,000 ரூ அந்த வழக்குரைஞருக்கு ஃபீஸ் கொடுத்துள்ளனராம். போக்குவரத்துச் செலவே இது வரை ஒவ்வொருவருக்கும் 35,000 ரூ ஆகியுள்ளதாம்.

பிள்ளைகளை வைத்துக் கொண்டு தாம் எவ்வாறு எந்த வருமானமும் இல்லாமல் துன்பப்படுகிறோம் என இந்தப் பெண்கள் புலம்பினர். சிறையில் இருக்கும் அவர்களின் கணவர்கள், “இனிமே நாங்க விடுதலை ஆகிறது கஷ்டம், எப்படியாவது பொழச்சுக்குங்க” எனச் சொல்கிறார்களாம். பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்கின்றனர் என்றார் அலமேலு.

என்ன கணக்கில் 430 பேர் கைது செய்யப்பட்டார்கள் எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது அவர்களுக்கு விளக்கத் தெரியவில்லை.

ஆந்திர மாநிலடி.ஜி.பி ஜே.வி.ராமுடு இது பற்றிக் கூறுவது:

“2014ல் கடும் நடவடிக்கைகள் தொடங்கியபின் இதுவரை 831 வழக்குகள் தொடுக்கப்பட்டு 5239 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 715 வாகனங்களும், 15,520 மரத்துண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜனவரி 2014 தொடங்கி இன்று வரை கைது செய்யப்பட்டவர்களில் ஆந்திரமா நிலத்தைச் சேர்ந்தவர்கள் 2202 பேர். பிற மாநிலத்தவர் 3033 பேர். இவர்களில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். 31 கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் ஆந்திரத்தவர்; 10 தமிழர்கள்; கர்நாடக மாநிலத்தவர் 3, பிற மாநிலத்தவர் இருவர். 45 செம்மரக் கடத்தல்காரர்கள்  தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” – (டெக்கான்கிரானிகல், ஏப்ரல் 15).

ஆக ஆந்திர டி.ஜி.பி சொல்வதிலிருந்து கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 2000 க்கும்மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் உள்ள பழங்குடி மற்றும் அடித்தளச் சாதியினர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளில் பயணிக்கும்போதும் கைது செய்யப்பட்டவர்கள். கேட்ட கேள்விக்கு அவர்கள் தமிழில் பதில்சொல்வது ஒன்றே போதும் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு.

இந்த முறை 20 பேர்கள் கொல்லப்பட்டுள்ள அதே நேரத்தில், 61 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்ஆந்திர போலீஸ் கூறியுள்ளது. ஆனால் 150 பேர்களுக்கும் மேல் அன்று  ஆந்திரக் காவலர்களால் பிடித்துச் செல்லப்பட்டதாகத் தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். மீதமுள்ள 100 பேர்களின் கதி என்னவெனத் தெரியவில்லை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. அ.தி.மு.க தலா 2 லட்சமும், தி.மு.க ஒரு இலட்சமும், தே.தி.மு.க 50,000மும், ஜி.கே.வாசன் காங்கிரஸ் 25,000மும் வழங்கியுள்ளன. பா.ம.க கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளுக்குப் பட்ட மேற்படிப்பு வரைக்கும், அதற்கு மேலும் முழுமையாகக் கல்விச் செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. நாங்கள் அங்கு சென்றபோது அங்கு வந்திருந்த பா.ஜ.கவினரிடம் ஏதாவது உதவி செய்தீர்களா எனக் கேட்டதற்கு, “பணமாகக் கொடுத்தால் செலவு செய்து விடுவார்கள். நாங்கள் தொலை நோக்கில் பயன் அளிக்குமாறு எதையாவது செய்ய உள்ளோம்” என்றனர்.

சந்திரபாபு அரசு சென்ற அக்டோபரில் செம்மரங்களை டன் ஒன்று 27 லட்ச ரூபாய் என ஏலத்தில் விற்றுள்ளது. வரும் மேயில் அடுத்த ஏலம் ஒன்று நடக்கப் போவதாகத் தெரிகிறது. அழியும் உயிரினங்கள் பட்டியலிலிருந்து செம்மரங்களை நீக்க வேண்டும் என அவர் மத்திய அரசுக்குக் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

செய்ய வேண்டியவை: 

1. மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களின் விளைவாக இன்று செம்மரக் கடத்தல் தடுப்புப் படை மீது இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் ஒரே ஒரு அதிகாரியின் பெயர் மட்டுமே அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் கூட அவர் தலைமையில் சென்ற யாரோ சில காவலர்கள் என்றுதான் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ஆந்திர அரசு முறையாக விசாரித்து நீதி வழங்கும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பான புலனாய்வை ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் (monitoring) கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்புப்படையின் தலைவர் டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் உட்பட கொலைச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளும் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2. கொல்லப்பட்ட20 பேர்களின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா 30 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

3. கொலை நடந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாமல் இப்போது போடப்பட்டுள்ள 144 தடை, கண்டால் சுடும் உத்தரவு முதலியன உடனடியாக நீக்கப்பட வேண்டும். கொல்லப்பட்ட அன்று இந்த 20 பேர்களைத் தவிர வேறு யாரும் கொல்லப்பட்டார்களா, சுற்றி வளைக்கப்பட்ட மற்றவர்களின் கதி என்னாயிற்று என்பவற்றை நேரில் கண்டறிய மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்பட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

3. செம்மரக் கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றைச் சேர்ந்த பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.

4. செம்மரக்கடத்தல் தொடர்பாகச் சிறையில் உள்ளவர்கள் அனைவர் குறித்த விவரங்களையும் உடனடியாக ஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும். இது இணையத் தளங்களில் யாரும் பார்க்கத்தக்க வடிவில் வெளியிடப்பட வேண்டும்.

5. செம்மரக்கடத்தல் மற்றும் இரு வன அதிகாரிகளின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பெரும்பாலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றிலேயே கைது செய்து கொண்டு சென்று பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் சென்ற பகுதிகள் மட்டுமின்றி திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், வேலூர் முதலான மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து பலரும் கைது செய்யப்பட்டு இன்று ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பழங்குடி மற்றும் வன்னியர், ஒட்டர் முதலான அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு தம் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் இவர்களின் விடுதலைக்காக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2013 டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்ட இரு ஆந்திர வனத்துறை அதிகாரிகள் ஶ்ரீதர் மற்றும் டேவிட் ஆகியோரின் கொலை குறித்து ஒரு விசாரணை ஆணையம்  அமைக்க வேண்டும். தமிழகத் தொழிலாளிகளைப் போலவே கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அடித்தளத் தொழிலாளிகள் பலரும் கூட இன்று கைது செய்யப்பட்டுச் சிறைகளில் உள்ளதாக ஆந்திர டி.ஜி.பி சொல்கிறார். அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேல் மட்டங்களில் உள்ள செம்மரக் கடத்தல் மாஃபியாக்களைக் கைது செய்து தண்டனை வழங்குவதற்கு ஆந்திர அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

6. சுமார் 1.4 கோடி செம்மரங்கள் சேஷாசலம் மற்றும் நல்லமல்லா வனப் பகுதிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை முழுமையாக எண்ணப்பட்டு (enumeration) அறிவிக்கப்பட வேண்டும். கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றி ஆந்திர அரசு வசம் உள்ள 10,000 டன் செம்மரங்களையும் ஏலம் விட்டுக் கிடைக்கும் தொகையைக் கொண்டு இவ்வனத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கு நலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். 2014 மேயில் சந்திரபாபு நாயுடு அரசு செம்மரங்களை டன் ஒன்று ரூ27 லட்சம் என ஏலத்தில் விற்றபோது ஹரித்துவாரில் உள்ள பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி யோக பீடம்’ மட்டும் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை ஏலம் எடுத்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் இம்மரங்களின் மதிப்பு டன் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை உள்ள நிலையில் இவற்றை அவ்வமைப்பு வெளியில் விற்று ஏராளமான லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இது தடுக்கப்படுவதோடு, இதுவரை மருந்து தயாரிப்புகளுக்கென ராம்தேவின் அமைப்பு எவ்வாறு செம்மரங்களைப் பெற்று வந்தது என்பது குறித்தும் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.

7. கடத்தல்காரர்களால் வெட்டப்பட்டு அழிக்கப்பட்ட செம்மரங்களை ஈடுகட்டப் புதிய கன்றுகளை நடுதல், உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க தாவரவியலாளர்கள் மற்றும் இது தொடர்பான வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8. தமிழக அரசு இதுவரை வனச் சட்டத்தை (Forest Act 2006) அமுல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிற மாநிலங்களைப் போல அது இங்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள பழங்குடிகளின் வீதம் சுமார் ஒரு சதம் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் குடும்பம் ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். வனத் துறை அதிகாரிகளுக்குப் பழங்குடி மக்கள் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள் (sensitisation programmes) மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

9. பழங்குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் 20 மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற வீதத்தில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வந்து பாடங்கள் நடத்துகிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் வழங்கப்படும் உணவு படுமோசமாக உள்ளது. போதிய காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றுடன் இது மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோல பழங்குடிப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் முறையாக மருத்துவ மனைகளுக்கு வந்து பணி மேற்கொள்கிறார்களா என்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கிராம உதவிச் செவிலியர்கள் கருத்தரித்துள்ள பெண்களைப் பிள்ளைப் பேறுக்கு முன்னும் பின்னும் முறையாகக் கவனித்து ஊட்டச்சத்து, மருந்துகள் முதலியவற்றை வினியோகிக்க வேண்டும். இந்தப்பணி முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

10. அடிவாரங்களிலிருந்து மலைக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள் இல்லாத இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். தமது விளை பொருட்களைக் கீழே கொண்டு சென்று விற்பதற்குரிய வகையில் சுமைகளுடன் பயணம் செய்யத்தக்க போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும். இனிப்புச் சத்து குறைந்த, நார்ச்சத்து அதிகமாக உள்ள திணை வகைகளின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதோடு உற்பத்தியாகும் திணை வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான மையங்களை (procurement centres) மலைகளில் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களும் (agro based industries) இப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கும் வகையில் மலைப்பகுதிகளில் குளம் குட்டைகளை உருவாக்க வேண்டும்.

11. மலை அடிவாரங்களில் வசிக்கும் வன்னியர், போயர் போன்ற அடித்தள மக்களின் நிலையும் பழங்குடி மக்களைப் போன்றே உள்ளன. இன்று கொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆந்திரச் சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்களிலும் இவர்கள் அதிக அளவில் உள்ளர். இவர்கள் மத்தியிலும் மேற்குறித்த நலத் திட்டங்களை மேற்கொள்ளுதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மலையிலும் அடிவாரங்களிலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலியவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

12. ஆந்திரமாநில அரசின் இந்த வன்செயல்களை ஆந்திர மாநிலத்தில் இயங்கும் APCLC, HRF, NCDNTHR மற்றும் PUDR முதலிய மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு வழக்குகளும் தொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவ்வமைப்புகளை இக்காரணங்களுக்காக மனதாரப் பாராட்டுகிறோம். எம் மக்கள் ஒவ்வொரு முறையும் ஆந்திரம் வந்திருந்து வழக்கை நடத்துவதிலும், சிறையில் உள்ளவர்களைச் சந்திப்பதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வது, அவர்களுக்குரிய சட்ட மற்றும் பிற உதவிகளைச் செய்வது ஆகியவற்றுக்கென வழக்குரைஞர்களுடன் கூடிய குழு ஒன்றை அமைத்து உதவி செய்ய வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

13. பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைது செய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைப்பது என்கிற நிலையில் தமிழக அரசு, “முறையான விசாரணை வேண்டும்” என ஆந்திர அரசை “வேண்டிக் கொண்டதோடு”  நிறுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு என்கவுன்டர் கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதற்கும், சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.

14. கொல்லப்பட்ட20 பேர்களின் மனைவியருக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ற அரசுப் பணிகளைவழங்க வேண்டு, குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும். அவர்களில் சிலரின் விவரங்கள்:

Name of Victim                Name of  Wife.                Age.          No of Children                          Age

Murugan.                             Thanjaiammal.                                      2

Sasikumar.                          Muniammal.                                         2.                                     4 and 2 yrs

Munusamy.                         Thanjaiammal.                                    2                                      3 and 2 yrs

Perumal.                              Selvi.                                                     3

Govindasvamy                    Muthammal.                                     4                                      13, 10, 5 and 4 yrs

Rajendaran.                         Nadia.                             20    ( 2 months Pregnant)

Venkatesan.                        Kanakarani                     20   ( married 6 months back)

Velayutham                         Padma.                          20.                  1                                   1 year 6 month

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*