அரசு கட்டணத்தை ஏற்காத தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதற்கு அரசுதான் பொறுப்பு என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள், 3 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் ஆகும். இந்த கல்வி ஆண்டில் 7 தனியார் மருத்துவ கல்லுரிகளும் அரசு ஒதுக்கீடாக மொத்தம் 261 இடங்கள் கொடுத்துள்ளன.

இதன்படி சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் எவ்வளவு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு இதுவரையில் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை. இருந்தாலும் அரசு வாய் வழியாக ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறியுள்ளது.

இதன்படி மாணவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சென்று சேரும் போது குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் அரசு கூறிய கட்டணத்திற்கு பதிலாக ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு மாணவர்களை சேர்க்க மறுத்துள்ளனர். மேலும், அரசு கூறியுள்ள கட்டணத்தை ஏற்காமல் கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தனியார் மருத்துவ கல்லூரி கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி சம்பத்குமார் தலைமையில் அரசு அமைத்த குழுவும் இரண்டு முறை கூடியுள்ளது. ஆனால், இந்த குழுவும் இதுவரையில் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை.

இந்நிலையில், நேற்று அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடு கிடைத்து சேர சென்ற மாணவர் ஒருவரிடம் ரூ 4 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு கல்லூரி நிர்வாகம் மிரட்டியதால் அந்த மாணவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கு அரசின் மெத்தன போக்குதான் காரணம்.

தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை அரசு உடனடியாக நிர்ணயம் செய்து அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னும் தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டணத்தை ஏற்கவில்லை என்றால் அக்கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த அரசு நடந்து வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஒரு சட்டம் இயற்றி அதை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*