புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 பேர் இறந்தது குறித்து 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 9ம் தேதியன்று சிறுநீரக துறையில் நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட போது மின்சாரம் தடைப்பட்டது. அப்போது டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்ற கதிர்காமத்தைச் சேர்ந்த சுசிலா (75), வீமன் நகரைச் சேர்ந்த அம்சா (58), காந்தி திருநள்ளூரைச் சேர்ந்த கணேசன் (55) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

அப்போது பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்ததோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா. 5 லட்சம் இழப்பீடு வழங்கி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்திரவிட்டார்.
இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு 11.03.2017 அன்று புகார் அனுப்பப்பட்டது.

அப்புகாரில் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது போதாது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வழங்கயுள்ள இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே, உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இச்சம்பவத்தின் முழுப் பின்னணிக் குறித்து ஆய்வு செய்ய பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தோம்.

இப்புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்ற 29.03.2017 அன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரை புதுச்சேரியிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததோடு, இப்புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்துப் புகார்தாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*