நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.04.2017) விடுத்துள்ள அறிக்கை:

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான உத்தரவினை உடனே பிறப்பிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசு கடந்த 2009 ஆகஸ்ட் 4 அன்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டம் 2010 ஏப்ரல் 1 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தின் அடிப்படையில் விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால், புதுச்சேரி அரசு உடனே விதிகளை உருவாக்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்றம் 2010 ஆகஸ்ட் 1ல் மூன்று மாதத்திற்குள் விதிகளை உருவாக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டது. இதன் பின்னர் புதுச்சேரி அரசு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகளை உருவாக்கி வெளியிட்டது.

சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது நேர்காணல், நுழைத்தேர்வு நடத்தக் கூடாது, வகுப்பறையில் மாணவர்களுக்குத் தண்டனைக் கூடாது, பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல், பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல் போன்றவற்றுக்கு இச்சட்டத்தின்படி உரிய சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் இவற்றைப் பின்பற்றுவது இல்லை.

புதுச்சேரி அரசு தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அரசாணையை வெளியிடாமல் காலந்தாழ்த்தி வருகிறது. இதனால், கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கியமான இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.

தமிழகத்தில் இச்சட்டப்படி வரும் 2017 – 2018 கல்வியாண்டிற்கு மொத்தமுள்ள 9000 சிறுபான்மை அல்லாத தனியார் சுயநீதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 1 லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தைப் பின்பற்றிப் புதுச்சேரி அரசும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான உத்தரவினை வரும் கல்வியாண்டிலேயே பிறப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*