தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்க கட்டாயப்படுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2017) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபடுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

பொறியியல் கல்லூரிகளில் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகள், படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு போன்றவற்றைக் கணக்கில் கொண்டே மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். ஆனால், தற்போது ஒவ்வொரு ஆண்டும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், பல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் இந்தக் கல்வியாண்டில் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அணுகி முதலாண்டு சேர்க்க வேண்டுமென வாய்வழியாக உத்தரவிட்டுள்ளது.

இது சட்ட விரோதமானது என்பதோடு பேராசிரியர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாகும். மேலும், ஏற்கனவே பேராசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் கல்வி சார்ந்த பணிகளோடு நிர்வாகப் பணிகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படுவதில்லை. இதைக் கேட்டால் பணி நீக்கம் செய்வது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தங்களுக்கென சங்கங்கள் வைத்துள்ளதால் ஓரளவுக்கு தங்கள் உரிமைகளைப் பெற முடிகிறது. ஆனால், பேராசிரியர்கள் சங்கம் வைத்துக் கொள்ள முடியாததால் மிகுந்த சிரமத்திற்கிடையே பணிப் பாதுகாப்பின்றிப் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, புதுச்சேரி அரசு இதுகுறித்து உயர்கல்வித்துறைச் செயலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பேராசிரியர்களை மாணவர் சேர்கைக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட கட்டாயப்படுத்தும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*