புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்: வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வரவேற்கிறோம்.

பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடியை வெளிக் கொண்டுவந்த காரணத்திற்காக ஊழியர் ஜெயராமன் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகளை புதுச்சேரி போலீசார் கைது செய்யவில்லை.

கடந்த 18.02.2008 அன்று ஜெயராமன் தற்கொலைக்கு முயன்று பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மருத்துவர் முன்னிலையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது மதிப்பெண் திருத்தியதை ஏற்றுக் கொள்ளும்படி பல்கலைக்கழக உயரதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். அதன் பின்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி, கடந்த 03.07.2009 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு விரிவான மனு ஒன்றை அனுப்பினோம்.

கொலையுண்ட ஜெயராமனின் தாய் மற்றும் அவரது அண்ணன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.

கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதிக் கிடைக்க சி.பி.ஐ. உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*