புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.03.2017) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது மின்சாரம் தடைப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மதியம் சிறுநீரக துறையில் நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அதற்கான மாற்று ஏற்பாடாக செய்யப்பட்டுள்ள மின்சாதனமும் செயல்படவில்லை. இதனால் டயாலிசிஸ் கருவிகள் இயங்கவில்லை.
இதன் காரணமாக அப்போது டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த கதிர்காமத்தைச் சேர்ந்த சுசிலா (75), வீமன் நகரைச் சேர்ந்த அம்சா (58), கணேசன் (55) ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்ட நேற்றைய தினத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

அப்போது பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு, இறந்துப் போனவர்களின் குடும்பத்திற்குத் தலா. 5 லட்சம் இழப்பீடு வழங்கி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்திரவிட்டுள்ளார். புதுச்சேரி அரசு நடத்தும் ஒரே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக்கூட முறையாக நிர்வகிக்க அரசு தவறியுள்ளது. நோயாளிகள் மூவர் இறந்த சம்பவத்திற்குப் அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது போதாது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வழங்கயுள்ள இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே, உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனே வழங்க வேண்டும்.

புதுச்சேரி அரசு இச்சம்பவத்தின் முழுப் பின்னணிக் குறித்து ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், புதுச்சேரி ஆளுநர், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதார துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு விரிவான மனு அளிக்க உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*