முன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு சிறையில் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி அப்பாராஜ் உரிய காலத்தில் முன்விடுதலை செய்யப்படாததால் மனமுடைந்து, உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இதற்கு அரசும், சிறை அதிகாரிகளுமே காரணம் என்பதால் இது குறித்து புதுச்சேரி அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த அப்பாராஜ் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்ததால் தன்னை முன்விடுதலை செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரி அரசு முக்கிய தினங்களில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ம் தேதியன்று அப்பாராஜை விடுதலை செய்ய வேண்டுமென கோரி காலாப்பட்டு சிறையில் தண்டனைக் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அப்போது உண்ணாவிரதம் இருந்த கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிறைத்துறை ஐ.ஜி., சென்ற குடியரசுத் தினத்தன்று அப்பராஜை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். அப்போது அருகிலிருந்த சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனிடம் அதற்கான கோப்பை முறைப்படி அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், மேற்சொன்ன அதிகாரி இதுதொடர்பான கோப்பை அனுப்பி வைக்காததோடு, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

குடியரசுத் தினத்தன்று விடுதலை ஆவோம் என்று நம்பிக்கையுடன் இருந்த அப்பாராஜ் அதிகாரிகளின் அலட்சியத்தால் விடுதலை செய்யப்படாததால் மிகவும் மனமுடைந்து மன உளைச்சலோடு இருந்துள்ளார். மேலும், 70 வயதான அவருக்கு இருதய மற்றும் காச நோய் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மனமுடைந்து இருந்த அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இரவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1997 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலர்களுக்கும் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 65 வயதைத் தாண்டிய ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதுவரையில் கடந்த 2008 முதல் 2010 வரையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 1509 பேரை விடுதலை செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் புதுச்சேரி அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை மதிக்காமலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த அயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள அரசாணையை மீறியும் செயல்பட்டதன் மூலம் ஒரு உயிர் பலியாவதற்கு அரசும், சிறைத் துறையும் காரணமாக இருந்துள்ளது.

மேலும், இதற்கு முழுக் காரணமான சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அப்பாராஜ் மரணத்திற்கு அரசுதான் முழுப் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லடசம் இழப்பீடு வழங்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*