
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.06.2025) விடுத்துள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் காலமானார். அவரது இறுதி நிகழ்வு முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென தமிழக அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் இன்று அதிகாலை செஞ்சியில் உள்ள அவரது மகள் வீட்டில் காலமானார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், நத்தமேடு என்ற ஊரில் பெரும் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரோடு நெருக்கமாக இருந்தவர். பெரியாரின் கொள்கை வழிநின்று சமூக நீதிக்குப் பங்களித்தவர். கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகிய தமிழக முதலமைச்சர்களோடு நெருக்கமாக இருந்தவர்.
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து பல முக்கிய தீர்ப்புக்களை வழங்கியவர். குறிப்பாக மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றங்களின் செயல்பாடு, அதிகாரம் குறித்து அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக தொடர்ச்சியாக மூன்று முறை இருந்தவர். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க இவர் அரசுக்கு அளித்த அறிக்கை முக்கியமானது. இவரது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஆழமான அறிக்கை மூலம் முஸ்லிம், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான அறிக்கையை தயாரித்தவர். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்து அப்போதைய முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோருக்குச் சமூக நீதி சார்ந்த பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளால் கற்றுத் தேர்ந்த, நேர்மையான, எளிமையான நீதிபதி என்ற பாராட்டைப் பெற்றவர். நான் அவரோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. மனித உரிமைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
எனவே, சாதனைகள் பல புரிந்து, புகழோடு வாழ்ந்து மறைந்த நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் இறுதி நிகழ்வை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply