
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.05.2025) விடுத்துள்ள அறிக்கை:
தனியார் சொகுசு ஓட்டலில் நகை திருடு போன புகாரில் தவளக்குப்பம் காவல்நிலையத்தில் பெண் ஊழியர்கள் 4 பேர் மீது தாக்குதல், மன உளைச்சலில் பெண் ஊழியரின் கணவர் மரணமடைந்த சம்பவத்திற்குக் காரணமான பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் நகை திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 11.05.2025 அன்று தவளக்குப்பம் காவல்நிலையப் போலீசார் அங்கு பணிபுரியும் பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்த கலையரசி உட்பட 4 பெண் ஊழியர்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 4 பேரையும் கடுமையாக தாக்கி அவமானப்படுத்தி உள்ளனர். மனைவி தாக்கப்பட்டது பற்றி அறிந்த கலையரசியின் கணவர் அர்ஜூனன் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துபோனார்.
இச்சம்பவத்திற்குத் தவளக்குப்பம் பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார்தான் காரணம். அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதால் தற்போது காவல் உதவி ஆய்வாளர் சண்முக சத்யா, காவலர்கள் சுரேஷ், வசந்த ராஜா, பெண் காவலர் பிருந்தா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் பெண்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கக் கூடாது, அவர்கள் வசிக்கும் இடத்திற்கோ அல்லது அவர்கள் தேர்வு செய்யும் இடத்திற்கோ சென்று விசாரிக்க வேண்டுமென்று பி.என்.என்.எஸ். சட்டப் பிரிவு 179(1) கூறுகிறது. ஆனால், தவளக்குப்பம் போலீசார் காவல்நிலையத்தில் 4 பெண் ஊழியர்களையும் நள்ளிரவு 1 மணிவரை விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியது சட்ட விரோதமானது.
காவல்துறை தற்போது பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசாரை பணியிட மாற்றம் செய்துள்ளது போதுமான நடவடிக்கை அல்ல. அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பெண் ஊழியர்களை சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது, இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி பெண் ஊழியர் கலையரசியின் கணவர் அர்ஜூனன் இறந்து போனதற்கு மேற்சொன்ன பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார்தான் முழு பொறுப்பு.
எனவே, சட்டத்திற்குப் புறம்பாக பெண் ஊழியர்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து, அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்திய தவளக்குப்பம் காவல்நிலையப் பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார் பேர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பி.என்.என்.எஸ். சட்டப் பிரிவு 179(1)-ன்படி பெண்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கக் கூடாது என்பது குறித்து அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.
Leave a Reply