கொலைக் கூடங்களாக மாறி வருவதால் அனைத்து ரெஸ்டோ பார்களையும் மூட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2025) விடுத்துள்ள அறிக்கை:

கொலைக் கூடங்களாக மாறி வருவதால் அனைத்து ரெஸ்டோ பார்களையும் மூட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த 09.08.2025 அன்று மிஷன் வீதியிலுள்ள ரெஸ்டோ பாரில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் மோஷ்க் சண்முகபிரியன் (வயது 23) அங்கிருந்த பவுன்சர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் ஷார்ஜன் (25) கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ரெஸ்டோ பார்களைக் கலால்துறையும், காவல்துறையும் கண்காணிக்காததாலும், விதிகளை மீறி விடிய விடிய நடத்த அனுமதித்ததாலும் இக்கொலை நடந்துள்ளது. சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் நகரம் முழுவதும் ரெஸ்டோ பார்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுமதி வழங்கிய முதலமைச்சர் ந.ரங்கசாமி, சுற்றுலா துறை அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் ஆகியோர் இக்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 12 மணிக்கு மேல் செயல்பட்டதால் 11 ரெஸ்டோ பார்களின் உரிமங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது கலால் துறை. இது ஒரு உயிர் போன பின்பு எடுக்கப்பட்ட காலங்கடந்த, கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 251 ரெஸ்டோ பார்கள் உள்ளன. இதில் புதுச்சேரியில் 212, காரைக்காலில் 31, மாகேயில் 3, ஏனாமில் 5 ரெஸ்டோ பார்கள் உள்ளன. விதிகளை மீறி மக்கள் நெருக்கமாக வசிக்கக் கூடிய இடங்கள், பள்ளிகள், கோயில்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரும் தொகைப் பெற்றுக் கொண்டு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டும் உள்ளது.

ரெஸ்டோ பார்களில் சட்டத்திற்குப் புறம்பாக பவுன்சர்கள் என்ற பெயரில் அடியாட்களை வைத்துக் கொள்ள கலால்துறை, காவல்துறை அனுமதித்தது ஏன்? இதனால், ரெஸ்டோ பார்கள் கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன.

எனவே, புதுச்சேரி அரசு ரெஸ்டோ பார்கள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*