
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.07.2025) விடுத்துள்ள அறிக்கை:
விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலர் கண்ணனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அரசின் விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலராக இருந்தவர் கண்ணன். இவர் சென்ற மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்குப் பணி நீட்டிப்பு வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது.
விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலர் கண்ணன் பணியில் இருந்தபோது ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக காப்பாற்றி உள்ளார்.
குறிப்பாக சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி என்பவர் ரயில் நிலையத்திற்கு எதிரே ரூ.5 கோடி மதிப்பிலான இடத்தில் சொகுசு தங்கும் விடுதி, பல வீட்டு மனைகள் ஆகிய சொத்துக் கணக்குகளைக் காட்டாமல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளார் என பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் (Central Vigilance Commissioner) உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்பினோம். இப்புகார்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தலைமைக் கண்காணிப்பு அதிகாரியான (Chief Vigilance Commissioner) தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல்துறை (Vigilance and Anti-Corruption Police Unit) ஆய்வாளர் என்னிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றார். மூன்று முறை சம்மன் அனுப்பியும் மேற்சொன்ன ஜான்சி (எ) ஜனாஸ் ராபி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதோடு காவல்துறை அதிகாரிகளையே மிரட்டினார்.
இந்நிலையில், சார்புச் செயலர் கண்ணன் இக்கோப்பைக் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் இருந்து திரும்பப் பெற்று, சட்டத்துறைச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அக்கோப்பை முடித்து வைத்துள்ளார். பிரதமர் அலுவலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட புகாரை முடித்து வைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக இருந்தவர் சார்புச் செயலர் கண்ணன். இது குற்றமிழைத்த சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபியை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் செயலாகும்.
எனவே, பணியிலிருந்த போது சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலர் கண்ணுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
மேலும், அரசு காலம் தாழ்த்தாமல் விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலர் பதவிக்கு திறமையான, நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.
Leave a Reply