அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம்

புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 11-01-2008 வெள்ளியன்று மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் ம.சந்திரகுமார் தலைமை தாங்கினார். தலைவர் சூ.சின்னப்பா வரவேற்றுப் பேசினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் போராட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், அமைப்பாளர் தந்தைபிரியன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். முடிவில் சங்க இணைச் செயலாளர் சு.முருகன் நன்றி கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு மீண்டும் வேலை அளித்த நிர்வாகம், தற்போது பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறி தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய முயற்சித்து வருகிறது.

தொழிலாளர்களைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வலியுறுத்தி 10-01-2008 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*