தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வெண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.05.2017) விடுத்துள்ள அறிக்கை:

தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான வேலழகன் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கை விசாரித்த திருபுவனை போலீசார் ஆரம்பம் முதலே குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளியான உதயகுமாரை காப்பாற்ற முயற்சித்த காரணத்திற்காக காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இக்கொலை வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த திருபுவனை காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இவர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இக்கொலை வழக்கில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதுவரையில் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இக்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கைப் புதுச்சேரி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. பாகூரில் சுவேதன் என்பவரை கொலை செய்து அவரது தலையை வெட்டி எடுத்துச் சென்று கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் உருட்டி விடப்பட்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் நாராயாணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுப் பதவியேற்று இதுவரையில் 26 கொலைகள் நடந்துள்ளன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 12 கொலைகள் நடந்துள்ளன. இதில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் தலித்துகள்.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீரழிவுக் குறித்து மத்திய உள்துறை தலையிட்டு விசாரணை செய்து சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலர், துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு விரிவான அறிக்கை அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*