பாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.02.2019) விடுத்துள்ள அறிக்கை:

பாகூர் காவல்நிலையப் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் ஜெயமூர்த்தி காவலில் மரணமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகர், புதுநகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரைக் கடந்த 21.11.2018 அன்று பாகூர் போலீசார் கைது செய்தனர். அவரை மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிறையில் உடல்நலம் குன்றிய அவரை சிறைத்துறையினர் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 27.11.2018 அன்று அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாகூர் காவல்நிலையத்தில் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால்தான் அவர் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176-ன்படி நீதித்துறை நடுவர் நீதிபதி சரண்யா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜெயமூர்த்தியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவால் பிரேதப் பரிசோதனைச் செய்யப்பட்டு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மேற்சொன்ன நீதிபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பாகூர் காவல் நிலையப் போலீசார் உட்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டார்.

ஆனால், சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் நீதிபதி விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை. விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்த பின்னரே குற்றமிழைத்தப் போலீசார் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியும். இந்தக் காலதாமதத்தினால் குற்றமிழைத்தப் போலீசார் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

எனவே, ஜெயமூர்த்தி காவல் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை நீதிபதி தாமதமின்றி உடனே அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*