கல்வி உதவித் தொகை கேட்டுப் போராடிய பாராமெடிக்கல் மாணவர்கள் 415 பேர் கைது!

புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் 415 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து, கடந்த 18.10.2010 அன்று காலை 11 மணியளவில், மாணவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அப்போது பெரியக்கடை போலீசார் முற்றுகையிட முயன்ற 115 மாணவிகள் உள்பட 415 மாணவர்களை கைது செய்தனர்.

முன்னதாக காமராஜர் சிலை அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சாமிநாதன் தலைமைத் தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார். விடுதலை வேங்கைகள் அமைப்பின் பொருளாளர் மோகன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் அஷ்ரப், மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் வை.பாலா,பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*