தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி, முதல் தகவல் அறிக்கைகளை இணையத்தில் வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் பின்பற்றி காவல்நிலையங்களில் பதியப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுகொள்கிறோம்.

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று தலைமைச் செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கடந்த 06.12.2010 அன்று தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுகிறோம்.

1)குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 207-ல் கூறப்பட்டுள்ள காலவரம்பிற்கு முன்னரே முதல் தகவல் அறிக்கைப் பெறலாம்.

2)குற்றம்சாட்டப்பட்டவர் தான் ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரா அல்லது அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள அவரோ,அவருடைய பிரதிநிதியோ சான்றிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலைக் கேட்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமோ அல்லது காவல் கண்காணிப்பாளரிடமோ விண்ணப்பிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று நீதிமன்றத்தில் செலுத்தக் கூடிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை நகல் அளிக்க வேண்டும்.

3)பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகளை அது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய வழக்கினுடையது அல்லாமல் இருந்தால், அவற்றை பதிவுச் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் டில்லி காவல்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதனை குற்றம்சாட்டப்பட்டவரோ அல்லது தொடர்புடைய எவரும் நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுக் காணலாம்.

4)முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி காவல்துறை பிப்ரவரி 1, 2011 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பு நகலை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*