கல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகளைக் குறைத்து புதுவைப் பல்கலைக்கழகம் உத்தரவு: பழையே முறையே தொடர வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2017) விடுத்துள்ள அறிக்கை:

கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் வகுப்பைப் பாதியாக குறைத்து கொண்டு வந்துள்ள சி.பி.சி.எஸ். முறையை புதுவைப் பல்கலைக்கழகம் மாற்றிப் பழைய நிலையே தொடர ஆவன செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) வழிகாட்டுதலின்படி புதுவைப் பல்கலைக்கழகம் அதன் இணைப்புக் கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். என்ற புதிய முறையை (Choice Based Credit System) 2017-2018 கல்வியாண்டு முதல் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. அதில் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில மொழிப் பாட வகுப்புகள் வாரத்திற்கு 6 ஆக இருந்ததை 3 ஆக குறைத்துள்ளது.

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் சென்ற கல்வியாண்டில் இந்த சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இக்கல்லூரியில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களின் வகுப்புகள் குறைக்கப்படாமல் பழைய நிலையே தொடர்கிறது.

தமிழகத்தில் சி.பி.சி.எஸ். முறை செயல்பாட்டில் உள்ள போதும் சென்னைப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களின் வகுப்புகள் குறைக்கப்படவில்லை.

மொழிப் பாடங்களின் வகுப்புகள் குறைக்கப்படுவதால் தற்போது பணிபுரியும் கல்லூரி ஆசிரியர்கள் பாதிப் பேர் வேலை இழக்கும் ஆபத்தும் உள்ளது. மேலும், தற்போது தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்புப் பறிபோய் அவர்களின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகும்.

இதனால் தமிழ் மொழிப் பாடம் சரிவர கற்க முடியாமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதால் தொன்மையான தமிழ் மொழியின் வளங்கள் குறித்து மாணவர்கள் முழுமையாக கற்க முடியாமல் போகும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே, புதுவைப் பல்கலைக்கழகம் உடனடியாக இந்த சி.பி.சி.எஸ். முறையில் மாற்றம் கொண்டு வந்து தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களின் வகுப்புகள் ஏற்கனவே உள்ளது போல் வாரத்திற்கு 6 மணி நேரமாக நீடிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், முதலமைச்சர், உயர்கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*