வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக பூபாலன் சேர்ப்பு: நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.08.2017) விடுத்துள்ள அறிக்கை:

வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ள கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி காவல்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருபுவனையைச் சேர்ந்த வேலழகன் கடந்த 19.04.2017 அன்று வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான உதயகுமாரை காப்பாற்ற முயற்சித்த காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து உதயகுமார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இவ்வழக்கை சி,ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இக்கொலையில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத கொத்தபுரிநத்தம் பூபாலனை போலீசார் வழக்கில் சேர்த்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வேறு ஒரு பூபாலனை கைது செய்வதற்குப் பதிலாக தவறாக இவரைக் கைது செய்துள்ளனர்.

இக்கொலை வழக்கில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்தது போல் திருபுவனை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சென்ற 14.06.2017 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பப்பட்டது.

இப்புகாரை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் புகாரினை அனுப்பி வைத்து அதன் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்திடவும், அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புகார்தாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் புதுச்சேரி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*