நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2017) விடுத்துள்ள அறிக்கை:

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் நீட் தேர்வினால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதால் மாநில கல்வி வாரியத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் போதியளவில் தேர்ச்சிப் பெறவில்லை. பின்தங்கிய நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. இதனால், புதுச்சேரியின் ஒட்டுமொத்த மாணவர்களின் மருத்துவக் கனவு முற்றிலும் தகர்ந்துப் போயுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவைப் பல்வேறு போராட்டங்களைத் தனித்தனியே நடத்தியுள்ளன. தமிழக முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற தீவிர முயற்சி செய்து வருகிறார்.

எனவே, முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து புதுச்சேரி அரசின் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத மருத்துவ இடங்கள் பெறுவதிலும் புதுச்சேரி அரசுத் தோல்வி அடைந்துள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வழக்கமாக அளிக்கும் குறைந்தப்பட்ச இடங்களைக்கூட இம்முறை அளிக்காததால் 137 மருத்துவ இடங்கள் அரசுக்குக் கிடைக்கவில்லை.

புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற அவசர சட்டம் ஒன்றை இயற்றி, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மேலும், அரசுக்கு 50 சதவீத இடங்கள் அளிக்காத தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி அரசியல் பிரச்சனைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கும் அதே வேளையில், மக்கள் பிரச்சனைகளில் குறிப்பாக மாணவர்களின் நலன் காக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*