தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.08.2017) விடுத்துள்ள அறிக்கை:

தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி, சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் சபரிநாதன் (வயது 27) என்பவரை கடந்த 22ம் தேதியன்று காலை 10 மணியளவில் விசாரணைக்கு என்று கூறி முத்தியால்பேட்டை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரை இரவு 10 மணி வரையில் காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்து உதைத்துச் சித்தரவதை செய்துள்ளனர்.

பின்னர், போலீசார் அவரது தந்தையை அழைத்து இரண்டு வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவரை ஒப்படைத்துள்ளனர். அப்போது அவரின் முகம், கை, கால், முதுகு என உடல் முழுவதும் லத்தியால் அடித்த காயத் தழும்புகள் இருந்துள்ளன. உடனே, அவரை அவரது நண்பர்கள் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் வீடு திரும்பிய சபரிநாதன் அன்றைய தினமே இரவு 2 மணியளவில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டு இறந்துப் போயுள்ளார். காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியவுடன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். சபரிநாதன் தற்கொலை செய்துக் கொண்டதற்கு முத்தியால்பேட்டை போலீசார் செய்த சித்தரவதையே காரணம் ஆகும்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் அவசரம் அவசரமாக போஸ்ட்மார்டம் முடித்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்கொலை செய்துக் கொண்டவரின் தந்தை தன் மகன் சாவுக்குக் காரணமான முத்தியால்பேட்டை போலீசார் மீது நடவடிக்கைக் கேட்டு அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, புதுச்சேரி அரசும், காவல்துறையும் உடனடியாக தற்கொலைக்குத் தூண்டியதாக முத்தியால்பேட்டை போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இறந்துப் போன சபரிநாதன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 சட்டப் பிரிவின்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அச்சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இச்சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*