நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

ஜூன் 10, 2015

கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் குடியிருப்பு ஒன்றில் வசித்தவர் சுப்பிரமணியன் (35) த/பெ. ஏகாம்பரம். ஐ.டி.ஐயில் ஃபிட்டர் பயிற்சிப் பெற்ற இவர் நிரந்தர வேலையின்றி பல்வேறு கூலி வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். கடந்த ஒரு மாதமாக நெய்வேலியில் ஒப்பந்த ஊழியராக பணி செய்துக் கொண்டிருந்தார். இவரது மனைவி ரேவதி (28). இவர்களுக்கு சுபாஷினி (8), நிவாஷினி (5), சோனா (3), வர்ஷித் (1) என்கிற நான்கு குழந்தைகள். நிரந்தர வருமானம் இல்லாத வாழ்க்கை.

நெய்வேலிக்கு வேலைக்குச் செல்லும் போது அங்குள்ள அவரது தூரத்து உறவினர் சபா அம்மா எனப்படும் எலிசபத்  என்பவரின் வீட்டிற்கு அவர் செல்வது வழக்கம் எலிசபத்தின் வீட்டிற்குப் பக்கத்தில் (3வது பிளாக்) குடியிருந்த முகமது யூசுப்பின் மனைவி மும்தாஜ் (47) என்பவரை சென்ற மே 23 அன்று யாரோ கொலை செய்து நகைகளைப் பறித்துக் கொண்டு உடலை எரியூட்டிவிட்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று (குற்ற எண். 179/15) இதச 302, 380 ஆகிய பிரிவுகளின்கீழ் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா விசாரித்து வருகிறார். சென்ற மே 28 அன்று இது தொடர்பாக சுப்பிரமணியனை அவரும் அவருடன் வந்த காவலர்களும் அழைத்துச் சென்று சுமார் ஒரு வாரம் சட்டவிரோதக் காவலில் வைத்துக் கடுமையாக சித்திரவதைச் செய்ததாகவும், அதன் விளைவாக அவர் சாகும் நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சென்ற ஜூன் 6 அன்று அதிகாலை 4 மணிக்கு மரணமடைந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.

இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது

1. பேரா. அ.மார்க்ஸ், தலைவர்,  மனித உரிமைகளுக்கான  தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisations – NCHRO), சென்னை,

2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights – FPR), புதுச்சேரி.

3. இரா. முருகப்பன், (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் -SASY), திண்டிவனம்,

4. இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,

5. வழக்குரைஞர் விஜயசங்கர், சென்னை.

6. மேத்யூ, HR Foundation, சென்னை,

7. வழக்குரைஞர் இல.திருமேனி, கடலூர்,

இக்குழுவினர் ஜூன் 9, 2015 நேற்று முழுவதும் பி.என்.பாளையத்தில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி ரேவதி மற்றும் குழந்தைகள், சுப்பிரமணியனை காவல்துறையினர் அழைத்துச் சென்றதற்கு நேரடி சாட்சியாக உள்ள அருகில் வசிக்கும் கருணாகரன், சத்தியசீலன், அன்பழகன் முதலானவரை சந்தித்து நடந்த சம்பவங்களை விரிவாகப் பதிவு செய்துக்கொண்டனர். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த உதவி ஆய்வாளர் சு.அன்பரசனை சந்தித்து இது தொடர்பாகப் பேசினர். சுப்பிரமணியத்தின் மரணம் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டுள்ள நெல்லிக்குப்பம் காவல்நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ. உதயகுமாரை சந்தித்து சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் சுப்பிரமணியனை அழைத்துச் சென்று காவலில் வைத்து விசாரித்த நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ராஜா, துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினர். ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்தர், மருத்துவத் துணைக் கண்காணிப்பாளர் அம்புரோஸ், சுப்பிரமணியனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஜெகதீசன் ஆகியோரிடம் விரிவாகப் பேசினர். ஜிப்மர் மருத்துவமனையின் புறக்காவல் நிலையத்தில் பொறுப்பாக இருந்த அதிகாரியிடமும் பேசினர்.

 நடந்த சம்பவம்

தொடர்புள்ள அனைவரையும் விசாரித்த வகையில் நடந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்தது: மே 23 அன்று நெய்வேலி டவுன்ஷிப் 3ம் பிளாக்கில் குடியிருந்த மும்தாஜ் என்கிற பெண்மணியை நகைக்காக யாரோ கொலை செய்கின்றனர். இவரது பக்கத்து வீட்டில் இருந்த எலிசபத் வீட்டாருடன் இவருக்குப் பகை இருந்துள்ளது. எலிசபத் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சுப்பிரமணியனை சந்தேகித்த நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ராஜா ஒரு பெண் போலீஸ் உட்பட சாதாரண உடையில் இருந்த சுமார் 10, 12 காவலர்களுடன் மே 28 அன்று இரவு சுமார் 2 மணி அளவில் சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்துள்ளார். கூட எலிசபத்தையும் அழைத்து வந்துள்ளார். எலிசெபத்தை அழைக்கச் சொல்லி, கதவைத் திறந்த சுப்பிரமணியனைப் பிடித்து அங்கேயே அடித்துள்ளனர். பயந்துக் கதறிய ரேவதி மற்றும் குழந்தைகளையும் மிரட்டியுள்ளனர். கொலை செய்ததை ஒத்துக்கடா, கொலை செய்ததை ஒத்துக்குங்கடி என இருவரையும் மிரட்டியுள்ளனர் பிள்ளைகள் பயந்துக் கத்தியுள்ளன. அந்த நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்த அருகில் வசிக்கும் டிரைவர் சத்தியசீலனை மிரட்டி அகன்று போகச்

சொல்லியுள்ளனர். பின்னர் சுப்பிரமணியனை மட்டும் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அருகில் வசிக்கும் சத்தியசீலன், ஆறுமுகம், அன்பழகன், கருணாகரன், அழகேசன் முதலியோர் இதற்கு நேரடி சாட்சிகள். சுப்பிரமணியனின் உடலில் பலகாயங்கள் இருந்தன என்பதையும் அவரது கால், கை நகங்கள் பிய்க்கப்பட்டு இருந்ததையும் நாங்கள் பலரிடமும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

அடுத்த நாள் காலை 9 மணியளவில் 4 காவலர்கள் வந்து ரேவதியையும் 4 குழந்தைகளையும் டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று மிரட்டியுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகளையும் தனியே பிரித்து மிரட்டியுள்ளனர். மாலையில் ரேவதியையும் அவரது பிள்ளைகளையும் ஒரு வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அடுத்த ஒரு வாரம் இப்படி நடந்துள்ளது. சுப்பிரமணியனை வீட்டுக்கு அனுப்பாததோடு மனைவி மக்கள் கண்ணிலும் காட்டவில்லை

இடையில் மே 31ம் தேதியன்று ரேவதி தன் கணவர் இவ்வாறு சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டது குறித்து எழுத்து மூலம் புகார் ஒன்றை கடலூர் காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். காவல் கண்காணிப்பாளர் அன்று விடுப்பில் இருந்ததால் புகார் கடித்தத்தை அங்கிருந்த யாரோ ஒரு அதிகாரி பெற்றுக் கொண்டுள்ளார். சற்று நேரத்தில், அந்த அதிகாரி எங்கோ வெளியில் சென்றுவிட்டார். நீண்ட நேரம் காத்திருந்த பின் ரேவதி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

சுமார் ஒரு வாரத்திற்குப் பின் ஜூன் 4ம் தேதி வியாழக்கிழமை அன்று ரேவதியை அவசரமாக நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் சுப்பிரமணியனுக்கு உடல் நலமில்லை என்றும், அழைத்துச் சென்று வைத்தியம் செய்யுமாறும் கூறியுள்ளனர். சுப்பிரமணியனின் உடல் எல்லாம் அடிபட்டு வீங்கி இருந்தது எனவும் கை, கால் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன எனவும் ரேவதி எங்களிடம் கூறி அழுதார். வைத்தியம் செய்ய வசதியில்லை என ரேவதி அழுதவுடன் ஒரு டாடா சுமோவில் அவரையும் சுப்பிரமணியனையும் ஏற்றிக் கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அட்மிஷன் போடும் போது எப்படி அடிபட்டது என்ற கேள்விக்கு சுப்பிரமணியன் பதிலளிக்க முனைந்த போது போலீசார் அவரை நோக்கி முறைத்துள்ளனர். சுப்பிரமணியன் பயந்துக் கொண்டே ஏதோ முணு முணுத்துள்ளார். மருத்துவமனையில் வழக்கமாக பதிவு செய்வதைப் போல் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளனர். உடனடியாக ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உரிய சிகிச்சையை தொடங்கியுள்ளனர். எனினும் அடுத்த நாள் உடலில் மூத்திரம் தேங்கி வயிறு உப்பி சுப்பிரமணியன் கதறத் துவங்கியுள்ளார். தன்னை லாடம் கட்டித்

தொடர்ந்து அடித்ததாகவும், முந்திரி மரத்தில் தலைக்கீழாக கட்டிவைத்து அடித்துச் சித்திரவதை செய்ததாகவும் சுப்பிரமணியன் ரேவதியிடம் கதறியுள்ளார். டாக்டர்களின் தீவிர சிகிச்சைப் பலனளிக்காமல் ஜூன் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்துள்ளது. அன்று மாலை 6 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் உடல் அவரது வீட்டில் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி மாலை அவரது உடல் பெட்டியில் வைத்துப் புதைக்கப்பட்டது.

இடையில் அப்பகுதியில் உள்ள மக்கள் நீதி வேண்டி கடலூர் பண்ரூட்டி சாலையில் மறியல் செய்தனர். அப்போது பண்ரூட்டி மற்றும் கடலூர் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆர்.டி.ஓ. ஆகியோர் நேரில் வந்திருந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ரேவதிக்கு ஒரு அரசு வேலை, குழந்தைகளின் படிப்பிற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, சுப்பிரணியனின் மரணத்திற்குக் காரணமான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல் ஆகிய உறுதிமொழி அளிக்கப்பட்ட பின் சாலை மறியல் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

சுப்பிரமணியனின் வீடு நெல்லிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளதால் சுப்பிரமணியன் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்துள்ளதாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் 174(1) பிரிவின் கீழ் வழக்கு (குற்ற எண். 269/15) பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுவது:

மும்தாஜ் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியும் சுப்பிரமணியனை ஒரு வார காலம் சட்ட விரோதக் காவலில் வைத்துக் கடும் சித்திரவதைகளைச் செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவருமான ஆய்வாளர் ராஜாவிடம் நாங்கள் இது குறித்துக் கேட்ட போது தான் அவரை விசாரித்தது உண்மைதான் எனவும், ஆனால் ஒவ்வொரு நாளும் அவரை மாலையில் வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும், அவரைச் சித்திரவதை செய்ததாகச் சொல்லப்படுவது பொய் எனவும் கூறினார். ஜிப்மர் மருத்துவமனையில் அவரைத் தாங்கள் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை எனவும், சுப்பிரமணியன் தானாகவே போய் சேர்ந்து கொண்டார் எனவும் கூறினார். நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குப் பொறுப்பான துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் நாங்கள் கேட்ட போது அவரும் இவ்வாறு சுப்ப்பிரமணியனை தாங்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து விசாரிக்கவில்லை என்றார். சுப்பிரமணியனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும் அதன் விளைவாகவே அவர் செத்தார் என்றும் கூறினார். உங்கள் போலீஸ்காரர்கள்தானே சுப்பிரமணியனை ஜிப்மர் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர் எனக் கேட்டபோது அது தனக்குத் தெரியாது என்றார்.

நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் பணியில் இருந்த துணை ஆய்வாளர் அன்பரசனைக் கேட்ட போது சுப்பிரமணியனை விசாரித்தது உண்மைதான் எனவும், ஆனால் அப்போது மூன்று நாட்கள் தான் சி.சி.டி.வி பயிற்சிக்காகச் சென்றுவிட்டதாகவும், சுப்பிரமணியனுக்கும் மும்தாஜ் கொலைக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது என்றும் கூறினார்.

இன்று காலை கடலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.ராதிகா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும்வரை அது காவல்நிலையச் சித்திரவதையினால் ஏற்பட்ட மரணம் எனவும், அந்த அடிப்படையில் கொலை எனவும் கருத இயலாது எனக் கூறினார்.

சுப்பிரமணியனுக்குச் சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் திடீரென மூத்திரக்காய் செயலிழந்ததால் சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்து போனார் எனவும் தாக்குதலின் விளைவாகத்தான் அப்படி நேர்ந்ததா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என்றார்.

 எமது பார்வைகள்

1. சுப்பிரமணியன் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருந்தவர், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் அல்லது சிறுநீரகம் பழுதுபட்டிருந்தது என்பதெல்லாம் முழுப் பொய். திடீரெனச் சிறுநீரகம் பாதிக்கப்படுகிற அளவிற்கு அவர் வயதானவரோ இல்லை, சக்கரை நோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவரோ இல்லை. மும்தாஜ் கொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மே 23 முதல் 25 வரை அவர் குடும்பத்துடன் வேளாங்கன்னி கோவிலுக்குச் சென்றுள்ளார். 28 நள்ளிரவில் அவரை ஆய்வாளர் ராஜா தலைமையில் வந்த காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதற்கு நேரடி சாட்சிகளாக பி.என்.பாளையம் சத்தியசீலன், கருணாகரன், நெய்வேலி எலிசபத், சுப்பிரமணியனின் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மே 28 இரவு அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியன் மீண்டும் ஜூன் 6 மாலைதான் பிணமாகக் கொண்டு வரப்பட்டார் என்பதற்கு பி.என்.பாளையத்தில் சுப்பிரமணியனின் வீட்டைச் சுற்றி வாழும் மக்கள் அனைவரும் சாட்சிகளாக உள்ளனர். சுப்பிரமணியனை ஒருவார காலம் ஆய்வாளர் ராஜாவும் அவரது காவலர்களும் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதைச் செய்ததும் அதன் விளைவாகவே அவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதும் உண்மை. 2. தன்னுடைய கணவர் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதைச் செய்யப்படுவது குறித்துப் புகாரளிக்க கடலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மே 31 அன்று ரேவதி சென்றுள்ளார். கண்காணிப்பாளர் விடுப்பில் இருந்ததால் அவரது மனுவை அங்குள்ள

அதிகாரி ஒருவர் பெற்றிருக்கிறார். காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ரேவதியின் மனு மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கண்காணிப்பாளர் விடுப்பு முடிந்து திரும்பிய பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்தமனுவின் மீது காவல் கண்காணிப்பாளர் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று சுப்பிரமணியன் இறந்திருக்க மாட்டார். அவரது மனைவியும் நான்கு பச்சிளங் குழந்தைகளும் இப்படி அனாதைகளாகியிருக்க மாட்டார்கள். கடலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராதிகா அவர்கள் இது போன்ற விடயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்பவர் என்பதைப் பலரும் கூறினர்.

3. தமிழகமெங்கும் தொடர்ந்து காவல் நிலையச் சாவுகள் நடைபெற்று வருகின்றன, விசாரணைக்கு அழைத்து வந்தவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, 12 வயதுச் சிறுவனை வாய்க்குள் பிஸ்டலை வைத்துச் சுடுவது என்பதெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் இங்கு நடந்தவை. திருக்கோவிலூரில் நான்கு இருளர் பெண்களைக் காவலர்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர். இத்தகைய குற்றங்களில் குற்றவாளிகளான காவலர்களைக் காப்பாற்றுவதைத் தமிழக அரசு ஒரு கொள்கையாகவே வைத்துச் செயல்படுகிறது. கைது செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் டி.கே.பாசு வழக்கில் அளித்துள்ள நெறிமுறைகளை எந்தக் காவல் நிலையமும் அதிகாரிகளும் கடைபிடிப்பதில்லை. இந்நிலை தொடரும் வரை அப்பாவிக் குடிமக்கள் கொல்லப்படுவது குறையப் போவதில்லை.

 கோரிக்கைகள்

 1.   சுப்பிரமணியனைச் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதைச் செய்து அவரது மரணத்திற்குக் காரணமான நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டவிரோதக் காவலில் வைத்திருந்தது, மரணம் நேரும் வகையில் சித்திரவதைச் செய்தது ஆகிய குற்றங்களுக்காக கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட வேண்டும்.

2.   இந்த வழக்கைத் தமிழகக் காவல்துறை விசாரித்தால் எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்  3.   சுப்பிரமணியனின் மனைவியும் நான்குப் பச்சிளம் குழந்தைகளும் இன்று அனாதைகளாகியுள்ளனர். கடந்த இரு வாரங்களாக அவர்கள் கடும் மனச் சிதைவுகளுக்கும் ஆளாகியுள்ளனர், இது தொடர்பாக நடந்த சாலை மறியலின் போது அரசு அதிகாரிகள் வாக்களித்தபடி சுப்பிரமணியனின் மனைவி ரேவதிக்கு அவரது தகுதிக்கு ஏற்ற அரசுப் பணியும் 25 இலட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். நான்கு குழந்தைகளின் கல்விச் செலவிற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*