75ஆவது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம்!

புதுச்சேரி கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (28.07.2022) மாலை 6 மணியளவில், தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்குத் தமிழர் களம் செயலாளர் கோ.அழகர் தலைமைத் தாங்கினார்.

கூட்டத்தில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்லாஹ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் அனிப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் பரகத்துல்லாஹ், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவுநர் சீ.சு.சாமிநாதன், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் இரா.வேல்சாமி, மனித உரிமைகள் மற்றும் நூகர்வோர் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் இரா.முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.ச.தீனா, பீ போல்ட் அமைப்புத் தலைவர் பஷீர், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் த.இரமேஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் அ.கலைப்பிரியன், சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் தெ.சாந்தகுமார், பழ.பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி நாடெங்கும் 75 இடங்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவுகூரும் வகையில் 75 இடங்களில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கடற்கரை காந்தி சிலை எதிரில் இதுபோன்று தியாகப் பெருஞ்சுவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் சாவர்கர் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை. மேலும், அவர் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர். அதோடு மட்டுமல்லாமல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வெள்ளை ஏகாதிபத்திதத்திற்கு எதிராகப் போராட படை கட்டினார். அப்போது சாவர்க்கர் இப்படையில் இந்துக்கள் யாரும் சேர வேண்டாம் எனக்கூறி நேதாஜி படைக்கு எதிராக படை கட்டியவர். சாவர்க்கர் இப்படி சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டுத் துரோகம் இழைத்தவர். இப்படிப்பட்ட சாவர்கர் பெயரைத் தியாகிகளின் பட்டியலில் சேர்த்து தியாகப் பெருஞ்சுவரில் பெயர்ப் பலகைத் திறந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, புதுச்சேரியிலுள்ள கட்சி, சமூக அமைப்புகளின் சார்பில் 30.07.2022 சனிக்கிழமை, காலை 10 மணிக்கு, சின்னக்கடை மணிக்கூண்டு அருகே ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று 75வது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் உள்ள சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம் நடத்த உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*