![P.V.Bose](https://www.peoplesrights.in/tamil/wp-content/uploads/2023/07/P.V.Bose_.jpg)
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2023) விடுத்துள்ள அறிக்கை:
பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கம் செய்த புதுச்சேரி அரசுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. (AICTE), யு.ஜி.சி. (UGC) விதிகளை மீறியும், பணியில் மிகவும் இளையவரான (Junior most) இசைத்துறை உதவிப் பேராசிரியர் பி.வி.போஸ் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டார். மேலும், இவர் இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு எச்சரிக்கை மெமோ (Warning memo) வழங்கப்பட்டுள்ளது. இவரை பதவி நீக்கம் செய்து, தகுதியானவரை முதல்வராக நியமிக்க வேண்டுமென்று அரசைத் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
பொறுப்பு முதல்வராக பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து சட்ட விரோதமாகவும், மாணவர்கள், பேராசிரியர்கள் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தார்.
தகுதியே இல்லாத 7 பேரை ஏ.ஐ.சி.டி.இ. (AICTE), யு.ஜி.சி. (UGC) விதிகளை மீறி தற்காலிக ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களாக நியமித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பணியில் சேரும்போது பி.எச்.டி. பட்டப் படிப்பு முடிக்காதவர், அரசுத் துறைகளில் இரண்டு இடங்களில் பணி செய்து மோசடியில் ஈடுபட்டவர், தொடர்புடைய துறையில் செய்முறைப் பயிற்சி இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டனர்.
முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்குவதாகக் கூறி பல்கலைக்கூட பேராசிரியர்கள், ஊழியர்களின் சம்பளப் பணம் ரூபாய் 5 இலட்சத்து 17 ஆயிரத்தை விதிகளை மீறி முறைகேடாக செலவழித்துள்ளார். இவருக்கு ரூபாய் 9 ஆயிரத்து 999 மட்டுமே நிதி கையாளும் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த நிதி முறைகேட்டால் இவருக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையிலான தலைமை ஊழல் கண்காணிப்புப் பிரிவு (Chief Vigilance Office) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இவர் பொறுப்பு முதல்வராக பொறுப்பேற்ற சென்ற 22.09.2021 முதல் மாணவர்களுக்கு வகுப்பே எடுக்கவில்லை. இது அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி குற்றமாகும். இதுகுறித்து இவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மேற்சொன்ன பி.வி.போஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மேலும், சென்ற 21.07.2023 அன்று பி.வி.போஸ் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்திக் கைதானோம்.
இந்நிலையில், நேற்று பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டு, இசைத்துறை உதவிப் பேராசிரியர் எல்.அன்னபூர்ணா பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகளின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
மேலும், மேற்சொன்ன பி.வி.போஸ்-ஐ பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், செயலர், இயக்குநர் உள்ளிட்டோருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்ட 7 உதவிப் பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். நிதி முறைகேடு, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்காத குற்றச்சாட்டுகள் மீது விரைந்து விசாரணை நடத்தி மேற்சொன்ன பி.வி.போஸ்-ஐ பணி நீக்கம் செய்ய வேண்டும். துறை ரீதியான விசாரணை நிலுவையில் உள்ளதால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
Leave a Reply