வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டும் பணி கடந்த 11.02.2022 அன்று தொடங்கியது. ரூபாய் 60 கோடியில் 360 மீட்டர் நீளம் 18 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் கடந்த 28.10.2024 அன்று துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் புயல், மழையின் போது இப்பாலத்தின் கிழக்குப் பகுதி இணைப்புச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளேயே விரிசல் ஏற்பட்டதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான் பொறுப்பு. பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடும் அரசசையும், பொதுப்பணித்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்பாலத்தைக் கட்ட பொறுப்பாக இருந்த பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் பதவி உயர்வுப் பெறவும், தேசிய நெடுஞ்சாலைப் பிரிவுதான் வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இப்பதவியைப் பெற்றவர் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அதிகாரியால் எப்படி இப்பாலத்தை முறையாகக் கட்டி இருக்க முடியும். இப்பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன.

இப்பாலம் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் செலவழித்து முறையாகக் கட்டப்பட்டுள்ளதா, மக்கள் பயணம் செய்ய பாதுகாப்பானதா என்பது குறித்து வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலர், சி.பி.ஐ. இயக்குநர், துணைநிலை ஆளுநர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*