புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி ஊழல் முறைகேடு: கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி நடந்த மோசடியில் தொடர்புடைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 2-ந் தேதியன்று காலை 10 மணியளவில், பெருந்தலைவர் காமராசர் கல்வித் துறை வளாகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் சீ.சு.சாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் மாணவர் நலச் சங்கத் தலைவர் மு.நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கப் பொதுச்செயலாளர் பா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் புதுச்சேரியின் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

மதிப்பெண் திருத்தி ஊழல், மோசடி செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேடாக தேர்வுச் செய்யப்பட்ட ஆசிரியர் நியமனப் பட்டியலை ரத்து செய்து தற்போது அவர்களுக்கு நடந்து வரும் பயிற்சி வகுப்பையும் ரத்து செய்ய வேண்டும். புதிதாக ஆசிரியர்களை முறையாகவும், வெளிப்படையாகாவும் தேர்வுச் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*