அரசாணைப்படி பிராந்திய இடஒதுக்கீடு அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 28.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்ட நிலையில் பிராந்திய இடஒதுக்கீடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி அரசுக் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே காரைக்கால், மாகே, ஏனாம் பகுதி மாணவர்களுக்குப் பிராந்திய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு அரசுக் கல்லூரிகளில் நடக்கும் உயர் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் காரைக்காலுக்கு 18 சதம், மாகேவிற்கு 4 சதம், ஏனாமிற்கு 3 சதம் என பிராந்திய இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது.

“…it has been decided that the special allocation in admission to various professional degree courses offered by Government sponsored colleges, for the candidates of Karaikal, Mahe and Yanam regions shall respectively be 18%, 4% and 3% of seats earmarked to the candidates of Puducherry Union Territory.”

–   G.O. Ms. No. 99, Chief Secretariat (Education), dated 10.08.2006.

இதன்படி, புதுச்சேரி அரசுப் பொறியியல் கல்லூரியிலும், அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த பிராந்திய இடஒதுக்கீடு என மேற்சொன்ன அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசுப் பொறியியல் கல்லூரியில் மட்டுமே பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துவிட்ட நிலையில், அராசணையில் கூறியுள்ளபடி அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை.

ஆனால், புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து பிராந்திய இடஒதுக்கீடு வழங்க முடிவுச் செய்துள்ளது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். மேலும், அரசாணையில் “அரசுக் கல்லூரிகளுக்கு” (Government sponsored colleges) மட்டுமே பிராந்திய இடஒதுக்கீடு என தெளிவாக குறிப்பிட்டுவிட்டு, தற்போது அரசே அதை மீறுவது தவறான போக்காகும்.

பிராந்திய இடஒதுக்கீடு குறித்து அரசு போட்ட மேற்சொன்ன அரசாணை சரியானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அந்த அரசாணையை மீறி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு வழங்குவது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

ஒட்டுமொத்தமாக பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும். இருந்தாலும், அரசு தான் போட்ட அரசாணையை தானே மீறுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு இதனை எடுத்துக் கூறுகிறோம்.

எனவே, புதுச்சேரி அரசு மேற்சொன்ன அரசாணையை மதித்து அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே பிராந்திய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிராந்திய இடஒதுக்கீடு வழங்குக் கூடாது.

இதுகுறித்து, துணைநிலை ஆளுநர், முதல்வர், உயர்கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர், சென்டாக் அமைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*