அதியமான்கோட்டை காவல்நிலைய துப்பாக்கி கொள்ளை சம்பவம் – உண்மையறியும் குழு அறிக்கை


செய்தியாளர் கூட்டத்தில் அ.மார்க்ஸ்…


செய்தியாளர் கூட்டத்தில் உண்மையறியும் குழுவினர்…


செய்தியாளர் கூட்டத்தில் உண்மையறியும் குழுவினர்…


நடந்தவற்றை விளக்குகிறார் அரிபாபு…


அதியமான்கோட்டை காவல்நிலையம்…


சர்ச்சைக்குரிய இடம்…


துப்பாக்கிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வாழைத்தோப்பு …


காவல்துறையால் பாதிக்கப்பட்ட குமார்…


காவல்நிலையத்தில் வைத்து
விசாரிக்கப்பட்ட குமாரின் குடும்பம்…

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டதை (9.02.2008) தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது குறித்து புகார்கள் வந்ததை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சார்பில் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.

1. விஞ்ஞானி கோபால், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), சென்னை.

2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

3. வழக்குரைஞர் கோ. அரிபாபு, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCL), சேலம்.

4. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR).

5. உதயம் சுப.மனோகரன், மக்கள் வழக்கறிஞர் சங்கம் (IAPL), இந்தியா.

6. வழக்குரைஞர் பாவேந்தன், தமிழக மக்கள் உரிமைக் கழகம்.

7. பூமொழி, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம்.

8. வழக்குரைஞர் கா.கேசவன், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCL).

9. வழக்குரைஞர் பா. சுதாகரன், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (CPCL).

இக்குழு பிப்ரவரி 17, 18 (2008) ஆகிய தேதிகளில் தர்மபுரி நகரம், அதியமான் கோட்டை, நாயக்கன் கொட்டாய், நல்லம்பள்ளி, நத்தம், வெள்ளாளப்பட்டி, செம்மானஅள்ளி, புளியம்பட்டி ஆகிய ஊர்களுக்குச் சென்று விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களையும், அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் ஜே।உதயகுமாரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நஜிமல் ஹோடா ஐ.பி.எஸ். அவர்களையும் நேரில் சந்தித்து விபரங்களைக் கேட்டு அறிந்தது.

சம்பவம்

பிப்ரவரி 9-ம் தேதி அதிகாலையில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் ஆயுத பாதுகாப்பு அறைக்குள் இருந்த 6 துப்பாக்கிகள் மற்றும் 1 வாக்கி டாக்கி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு சென்றதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகிறது. அதனை தொடர்ந்து மோப்பநாய்கள் சகிதம் போலீஸ் விசாரணை துவங்கியது. அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் தவிர 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் 6 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வந்தன. நக்சலைட்டுகள் இதனை செய்து இருக்கலாம் என்கிற ரீதியிலும் செய்திகளை வெளியிடப்பட்டன.

தொடர்ந்து மேலே குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள பலர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்। சிலர் உடனடியாக விசாரணை முடித்து திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் நான்கு நாட்கள் வரை வழக்கு பதிவுகள் எதுமின்றி, சட்டவிரோத காவலில் வைத்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய சித்ரவதை எதுவும் செய்யப்படவில்லை எனவும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்யக் கூடாது எனவும், யாரிடமும் புகார் செய்யக்கூடாது என்றும் அவர்களிடம் இருந்து எழுதி வாங்கப்பட்டுள்ளது.

யார் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்। யார் சித்ரவதை செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டனர் என்று கூறும்முன், இதற்கு சில நாட்கள் முன்பு நடைபெற்ற ஒரு முக்கிய சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேசம்பட்டி என்ற கிராமத்தில் தியாகி கூன்மாரியிடம் இருந்து தியாகி பச்சையப்பன் என்பவர் நெடுஞ்சாலை ஒரத்தில் உள்ள 4.5 ஏக்கர் நிலத்தை அடைமானம் பெற்றுள்ளார். உரிய நேரத்தில் திருப்பாவிடின் தனக்கே சொந்தமாகி விடும் என்கிற “எதிரிடை கிரயம்” என்னும் முறையில் இந்த அடைமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறித்த ஆண்டில் அவர் அடைமானத்தை திரும்ப பெறாததால் அந்த இடம் பச்சையப்பனின் பாத்தியத்தில் இருந்து வருகிறது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் நிலவுரிமையாளர் கூன்மாரி தொடுத்த வழக்கொன்றில் கிருஷ்ணகிரி உரிமையியல் நீதிமன்றம் 1982-ஆம் ஆண்டு அடைமானம் பெற்ற பச்சையப்பனுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கிறது. பின்னர் கூன்மாரி உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெறுகிறார். பச்சையப்பன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தோற்று விடுகிறது. பல ஆண்டுகளுக்கு பின் அடைமானம் பெற்றவரை வெளியேற்ற உரிய ஆணையை கூன்மாரி பெற்று போலீஸ் உதவியுடனும், ஏராளமான உறவினர் மற்றும் ஆதரவாளர்களுடனும் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பச்சையப்பன் குடும்பத்தினரை வெளியேற்றி, அங்கிருக்கும் அவர்களது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வெளியேற்றுகிறார். பச்சையப்பன் குடும்பத்தினர், கால அவகாசம் கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கூன்மாரியிடம் இருந்து அரசியல் ரீதியிலும், பிற வகைகளிலும் செல்வாக்கு மிகுந்த தர்மபுரியை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் சில கோடி ரூபாய்களுக்கு அந்த நிலத்தை பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, தனது செல்வாக்கை காவல் துறையினரிடம் செலுத்தியதாகப் பலர் எங்களிடம் புகார் செய்தனர்.

நிலத்திலிருந்து கட்டயமாக வெளியேற்றப்பட்ட பச்சையப்பன் குடும்பத்தை சேர்ந்த ஒரு சிலர் காவல் துறை ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டதாக தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிகிறது। காவல் துறையின் மீது ஊழல் குற்றச்சாட்டையும் சிலர் கூறியுள்ளனர். இதனால் காவல்துறை பச்சையப்பன் குடும்பத்தின் மீது கடும் ஆத்திரம் அடைந்து உள்ளனர்.

இந்த சம்பவங்களை ஒட்டி அடுத்த சில நாட்களில் துப்பாக்கி கொள்ளை நடைபெற்றது. காவல் துறையின் விசாரணையும் தொடங்குகிறது. நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட உண்மைகள் தெரிய வந்தன.

உண்மைகள்

1) விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரம்

i) பச்சையப்பன் குடும்பத்தினர் குறிப்பாக வெள்ளாளபட்டியைச் சேர்ந்த குமார், சேசம்பட்டியை சேர்ந்த நேதாஜி மற்றும் வெள்ளாளப்பட்டி தன்ராஜ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தற்பொழுது நேதாஜி கோவை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இவர்களை தவிர பெண்கள் உள்பட பச்சையப்பன் குடும்பத்தை சேர்ந்த பலரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ii) கூன்மாரி குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒரிருவர் மட்டும் விசாரணை செய்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். கூன்மாரியின் பேரன் சசிகுமார் என்பவரை நேரில் சந்தித்த பொழுது அவர் இதனை ஏற்றுக் கொண்டார்.

iii) இந்த சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத நக்சல்பாரி இயக்கத்தை (ம.ஜ.இ.க, ம.ஜ.இ.அ) சேர்ந்த பலரின் மீது காவல்துறை ஆரம்பத்தில் இருந்தே பொய்க் குற்றச்சாட்டு பரப்பியுள்ளதோடு, தங்களது பழைய பகையைத் தீர்க்கும் வண்ணம் நத்தம் கோவிந்தசாமி, வெள்ளாளப்பட்டி மாதன், மத்தன்கொட்டாய் மாதன், ஏலகிரி ராமன், வெள்ளாளப்பட்டி சித்தானந்தம் ஆகியோர் விசாரணைக்கு உட்பட்டு மிரட்டப்பட்டுள்ளனர். பா.ம.க ஒன்றிய செயலாளரும் வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து தலைவருமான மதியழகன், ம.தி.மு.க சண்முகம் ஆகியோரும் கடுமையாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

ம.ஜ.இ அணியைச் சேர்ந்த சித்தானந்தன் தான் தலைமறைவாய் இருந்த காலத்தை காட்டிலும் இச்சம்பவத்தை ஒட்டியே தேடுதல் வேட்டைக்குட்படுத்தபட்டதாக எங்களிடம் கூறினார்.

2) காணாமல் போனது தொடர்பான காவல் துறையினரின் விசாரணையில் தெரியவரும் குளறுபடிகள்.

i) காவல் நிலையத்தில் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை அங்கிருந்த காவலர்கள் முன்னிலையில் அவர்களுக்கு தெரியாமல் எடுத்துச் சென்றதாக சொல்லப்படுவது நம்பக்கூடியதாக இல்லை। பூட்டை உடைத்து ஆயுதங்கள் கொள்ளை போன போது பணியிலிருந்த காவலர்கள் தூங்கியதாக சொல்வது ஏற்கக்கூடியதாக இல்லை. சக்தி வாய்ந்த .303 துப்பாக்கிகளை விட்டுவிட்டு ஏன் சாதாரண துப்பாக்கிகளை எடுத்துச் சென்றனர் என்பதும் விளங்கவில்லை.

ii) சரியாக ஒரு வாரத்திற்குப் பின் சென்ற 6-ம் தேதியன்று காவல் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் (சுமார் 150அடி) ஆறு துப்பாக்கிகளில் ஐந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்வதும் நம்பத் தகுந்ததாக இல்லை। இடையில் மோப்ப நாய்கள் சகிதம் போலீசார் தேடியும் இவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

iii) இதிலும் இன்னும் ஒரு துப்பாக்கியும், வாக்கி டாக்கியும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதும் புரியவில்லை.

iv) இந்த ஆறு துப்பாக்கிகள் மட்டும்தான் உண்மையிலேயே எடுத்துச் செல்லப்பட்டதா இல்லை டெபாசிட் செய்யப்பட்டிருந்த தனியார் துப்பாக்கிகள் எதுவும் எடுத்துச் செல்லப்பட்டதா என்பதும் தெரிவில்லை.

v) இது தொடர்பாக நிலைய ஆய்வாளரிடம் விசாரித்த பொழுது எதையும் சொல்வதற்கு மறுத்து விட்டார்.

vi) காவல் துறைக்கும், பச்சையப்பன் குடும்பத்திற்கும் பகை இருந்ததை மாவட்ட கண்காணிப்பாளர் ஒத்துக் கொண்டார். குறிப்பாக நேதாஜியின் மீது காவல் துறைக்கு ஆத்திரம் இருந்ததை ஒத்துக் கொண்டார். காவல் துறையைப்பற்றி (Big Mouth) இழிவாக பேசியதாகவும், வாய்ப்பு கிடைத்தால் தக்க பாடம் புகட்ட தயாராக இருந்ததையும் ஒத்துக் கொண்டார். அவதூறுகள் பேசியதற்குச் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று நாங்கள் கேட்டபொழுது, இத்தகைய சூழ்நிலைகளில் எல்லாவற்றையும் சட்டபூர்வமாக செய்ய முடியாது என்றார்.

vii) ஏடிஜிபி விஜயகுமார் கொடுத்துள்ள அறிக்கையில் காவலர்களே இதனை செய்து இருக்கலாம் என்கிற ஐயம் உறுதியாகின்றது. மாஜிஸ்திரேட் உத்தரவு பெற்று அவர்களின் மீது மருத்துவ சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், பெங்களுருக்கும் அழைத்துச் சென்று அவர்களின் மீது உண்மையறியும் சோதனைகள் செய்ய இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து உள்ளது. சந்தேகத்திற்குரிய ஆறு போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதும் அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. நாங்கள் சந்தித்த காவல்துறை அதிகாரிகள் விபரம் கூற மறுத்துவிட்டார். அவர்களின் மீது துறைசார் விசாரணையே நடைபெறுவதாகவே கண்காணிப்பாளர் எங்களிடம் குறிப்பிட்டார். வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படாத நபர்கள் மீது உண்மை அறியும் சோதனை செய்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்றதாக கண்காணிப்பாளர் கூறுகிறார்। எப்படி இது சாத்தியம் என்பதும் தெரியவில்லை.

மொத்தத்தில் காவல் துறை பல விஷயங்களை மூடி மறைப்பது விளங்குகிறது। இந்த துப்பாக்கி திருட்டு உண்மையிலேயே நடைபெற்றதா என்பதே அய்யத்துக்குரியதாக உள்ளது. இது நாடாகமெனில் காவல் துறை தன் மீது உள்ள சில குற்றசாட்டை மறைப்பதற்கும், குற்றசாட்டை கூறியவர்களை பழி வாங்குவதற்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளது என்பது உறுதி.

கோரிக்கைகள்

1.காவல் நிலையத்தில் நுழைந்து ஆயுத கொள்ளை நடைபெற்று இருப்பது கவலைக்குரிய நிகழ்வு. இது குறித்து காவல் துறை பொய் தகவல் பரப்பியது கண்டிக்கத்தக்கது. குற்றச்சாட்டில் காவலர்களே தொடர்புடையவராக இருப்பதாக கூறுவதால் தமிழக போலீசாரின் விசாரணை நம்பக்குரியதாக இருக்காது. எனவே, சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமென எங்கள் குழு கோருகிறது.

2. இந்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா எந்த சட்ட விதியின் கீழ் உண்மை அறியும் சோதனை நடைபெறுகிறது என்பதனை காவல் துறை விளக்க வேண்டும்.

3. உண்மை அறியும் சோதனை அடிப்படை மனித உரிமைகளை மீறக்கூடாது. அரசியல் சட்டத்தின் உறுப்பு 20 (1) விதிக்கு எதிரானது. காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட இருக்கின்ற உண்மை அறியும் சோதனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

4. விசாரணை என்ற பெயரில் தனிப்பட்ட விரோதத்தைக் காட்டி மக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ள காவல் துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்க்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*