புதுச்சேரி: ஊழல் அமைச்சர்கள் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ளக் கூடாது!

நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் வழக்குப் பதியப்பட்டுள்ள அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோரை உடனடியாக பதவியை விட்டு நீக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

வரும் 25-ந் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கிற நிலையில், ஊழல் அமைச்சர்கள் இக்கூட்டத் தொடரில் கலந்துக் கொள்வது என்பது சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் முரணானது. சட்டமன்ற கூட்டத் தொடருக்கு முன்னாள் ஊழல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்து சட்டமன்ற மாண்பைக் காப்பாற்ற வேண்டும்.

ஊழல் அமைச்சர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படிதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் அமைச்சர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த புதுச்சேரி போலீசை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால், அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் வழக்குப் போட்ட போலீஸ் மீது குறை சொல்வதும், ஊழலுக்கு வெளிப்படையாக துணைப் போவதும், குற்றத்தை நியாயப்படுத்துவதும் கண்டனத்திற்குரியது.

அண்மைக் காலமாக சில அமைச்சர்கள் சட்டத்திற்குப் புறம்பாகவும், சட்டமன்ற மரபுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளாட்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிப் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியில் பேசியுள்ளது அவர் ஏற்றுக் கொண்ட ரகசியக் காப்புப் பிரமாணத்திற்கு எதிரானது. இது சட்டப்படி குற்றமாகும். இது குறித்து புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர், செயலாளர் ஆகியோரிடம் விரிவான புகார் மனு அளிக்க உள்ளோம்.

புதுச்சேரி அரசு ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக இருப்பது குறித்து ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டவர்களுக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.

ஊழல் அமைச்சர்களுக்கு புதுச்சேரி அரசு ஆதரவாக இருப்பதால், இந்த அரசின் கட்டுபாட்டில் இருக்கும் போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்குப் பல்வேறு வகையில் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வல்சராஜ் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி போலீசார், அரசு வழக்கறிஞர் உரிய முறையில் ஆதாரங்களை முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.

எனவே, அமைச்சர் வல்சராஜ், ஷாஜகான் மீதான ஊழல் வழக்கை உடனடியாக சி.பி.ஐ. விசாரணக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 21-03-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*