இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க தேசிய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்தல்!

தில்லி சென்ற புதுச்சேரி அரசியல் கட்சி, இயக்கத் தலைவர்கள் பல்வேறு தேசிய கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் யூ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் சி.எம்.புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் தில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்கள், தேசிய கட்சித் தலைவர்களை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 16.12.2008 அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், 15.12.2008 அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இச்சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் நேரில் பேசுவதாக’ கூறினார்.

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ‘தங்கள் கட்சி இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக’ உறுதியளித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் ‘தான் விரைவில் இலங்கைச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக’ உறுதிபட கூறினார்.

மேலும், புதுச்சேரி கட்சி, இயக்கத்தினர் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 15.12.2008 அன்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*