அரவிந்தர் ஆசிரம முற்றுகைப் போராட்டம் 9ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

 அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் 7ந்தேதி நடக்கவிருந்த அரவிந்தர் ஆசிரம முற்றுகைப் போராட்டம் வரும் 9ந்தேதி வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 ஆசிரம சகோதரிகள் மற்றும் அவர்களது தந்தையாரை மீண்டும் ஆசிரமத்தில் தங்க வைக்க வேண்டும். ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தனி அதிகாரியாக நியமித்து நிர்வாகத்தை நடத்த வேண்டும். ஆசிரமத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், மர்ம சாவுகள், நில அபகரிப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆசிரம சகோதரிகள், அவர்களது தந்தையாருக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிக்கு உரிய இழப்பீட்டு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 7ந்தேதியன்று அரவிந்தர் ஆசிரம முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தோம்.

இந்நிலையில், ஆசிரமப் பிரச்சனைக் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அதே நாளன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவதால், வேறு நாளில் போராட்டத்தை நடத்துவது சரியாக இருக்கும் என எண்ணுகிறோம். எனவே, வரும் 9ந்தேதி வெள்ளியன்று, காலை 10 மணியளவில், தலைமை அஞ்சலகம் அருகில் ஒன்றுகூடி, அரவிந்தர் ஆசிரமத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்து வெற்றிப் பெற செய்யுமாற வேண்டுகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*