காவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2019) விடுத்துள்ள அறிக்கை:

கரிக்கன் நகர் ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசையும் காவல்துறையையும் வலியுறுத்துகிறோம்.

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (22) என்பவரை பாகூர் போலீசார் கடந்த 21.11.2018 அன்று இரவு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பிடித்துச் சென்றனர். அவரை பாகூர் காவல் நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் வைத்துப் போலீசார் கடுமையாக அடித்துச் சித்தரவதைச் செய்தனர். பின்னர் அவரை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அங்கும் அவரை சிறைத்துறையினர் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.

இதனால் சிறையில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தியை கடந்த 27.11.2018 அன்று புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்தனர். சிகிச்சைப் பலனின்றி அன்றைய தினமே ஜெயமூர்த்தி இறந்துப் போனார்.

அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் ஜெயமூர்த்தி இறப்புக் குறித்து நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அவரது உடல் ஜிப்மர் மருத்துவர் குழுவால் உடற்கூறாய்வுச் செய்யப்பட்டு விடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் சரண்யா அரசுக்கு அறிக்கை அளித்தார். அதில் உடற்கூறாய்வு அறிக்கையில் இறந்தவர் உடலில் 30 காயங்கள் இருந்தது உள்ளிட்ட ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி ஜெயமூர்த்தி பாகூர் போலீசார், சிறைத்துறையினர் தாக்கிதான் இறந்தார் என உறுதிபட கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாகூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், ஏ.எஸ்.ஐ. திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளில் சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஜெயமூர்த்தி எஸ்.சி. வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் காவலர் புகார் ஆணையத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்திய ஆணையத்தின் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதியுமான ஜி.ராஜசூர்யா வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென டி.ஜி.பிக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு வழக்கு புலன்விசாரணை பி.சி.ஆர். பிரிவு எஸ்.பிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தனித்தனியே மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதித்துறை நடுவர், காவலர் புகார் ஆணையம் நடத்திய விசாரணையில் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் ஜெயமூர்த்தியை தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, புதுச்சேரி அரசும், காவல்துறையும் இனியும் காலங்கடத்தாமல் குற்றமிழைத்த போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், அரசியல் கட்சிகள், அமைப்புகளை ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*