
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.05.2025) விடுத்துள்ள அறிக்கை:
மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வரவேற்கிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசியல் கட்சிகளாலும், சமூக அமைப்புகளாலும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது.
மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சமூக ரீதியான இடஒதுக்கீடு மொத்தம் 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என கூறியுள்ளது.
சாதிவாரி கணகெடுப்பு நடத்தினால் மேற்சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமூக ரீதியான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என்பதை மாற்றி கூடுதல் சதவீத இஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும்.
பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் முன் வைத்த விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படை காரணியாக அமையும்.
மத்திய அரசின் இந்த முடிவு சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான முன்னெடுப்பு ஆகும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றத்திற்கு பெருமளவில் உதவும்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறிய சமூக ரீதியான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என்பதை மாற்றி கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கவும், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார வரவேற்கிறோம். அரசியல் கட்சிகள் வலியுறுத்தியபடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலக்கெடு (Time line) விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
Leave a Reply