சிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விசாரணை சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கு விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (22) என்பவரை கடந்த 21.11.2018 அன்று மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பாகூர் போலீசார் பிடித்துச் சென்றனர். அவரை சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாக அடித்து சித்திரவதை செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலும் ஜெயமூர்த்தியை சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இதனால், பலத்த காயம் ஏற்பட்டதால் அவரது உடல்நிலை சிறையில் மோசமடைந்தது. கடந்த 27.11.2018 அன்று அவரை புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்த்தனர். அன்றைய தினமே சிகிச்சைப் பலனின்றி ஜெயமூர்த்தி இறந்துபோனார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரண்யா அரசுக்கு அறிக்கை அளித்தார். இதனைத் தொடர்ந்து அப்போது பணியில் இருந்த பாகூர் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், ஏ.எஸ்.ஐ. திருமால், காலாப்பட்டு சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இறந்தவர் எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென காவலர் புகார் ஆணையத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரை விசாரித்த ஆணையத்தின் தலைவரும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான இராஜசூர்யா வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை பி.சி.ஆர். பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், காவலர் புகார் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரி சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு மீது விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் கடந்த 07.08.2019 அன்று மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கின் புலன் விசாரணையை உத்தரவுக் கிடைத்த நாளில் இருந்து நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் பரத் சக்கரவர்த்தி ஆஜராகி வாதிட்டார். பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், ஆர்.சங்கரசுப்பு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கறிஞர்கள் கோ.பாவேந்தன், பி.எம்.சுபாஷ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உதவியாக இருந்தனர்.

இவர்கள் இல்லையேல் இந்த உத்தரவு வந்திருக்காது. வழக்கறிஞர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*