தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க வேண்டும்!

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.08.2021) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு வரும் 01.09.2021 அன்று முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோல், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால், புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஏற்கனவே பள்ளிகள் திறக்கும் நாள் அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.

சென்ற ஜீலை 15 முதல் அரசு ஊழியர்கள் 100 விழுக்காடு பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் ஆசிரியர்களைப் பணிக்குத் திரும்ப உத்தரவிடவில்லை. இதனால், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர் சேர்க்கைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளும் முறையாக அனைத்து ஆசிரியர்களும் நடத்தவில்லை. ஏழை எளிய மாணவர்கள் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத ஆசிரியர்கள் மீதும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் புதுச்சேரி அரசு மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறையின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

எனவே, தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வரும் 01.09.2021 அன்று பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*