மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.11.2020) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனே அரசாணை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15 அன்று மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட சட்டசபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கான சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை.

தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்தோம். அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் கோரிக்கை விடுத்தன.

இதன் பின்னர், புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

ஆனால், புதுச்சேரியில் அமைச்சரவை முடிவு செய்த பின்னரும்கூட இதுவரையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

எனவே, புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனே அரசாணை வெளியிட வெண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*