அரசுப் பள்ளி ஆசிரியர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.07.2021) விடுத்துள்ள அறிக்கை:

அரசுப் பள்ளி ஆசிரியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசையும் கல்வித்துறையையும் வலியுறுத்துகிறோம்.

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக அரசு ஊரடங்குப் பிறப்பித்ததால் புதுச்சேரி முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சென்ற ஜூன் 15 முதல் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர்களைப் பணிக்குத் திரும்ப அரசு இன்னமும் உத்தரவுப் பிறப்பிக்காததால் அவர்கள் விடுமுறையிலேயே உள்ளனர்.

தற்போது தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கவும், மாணவர்கள் சேர்க்கையும் நடத்தப்பட வேண்டும். அதேபோல், மாணவர்களுக்கு வாட்சாப் மூலம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் விடுமுறையில் உள்ளதால் மேற்சொன்ன பணிகளும், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்கள்தான் கல்விப் பயில்கின்றனர். இந்நிலையில், ஆசிரியர்களைத் தொடர்ந்து விடுமுறையிலேயே இருப்பது அம்மாணவர்களின் கல்விப் பெருமளவில் பாதிக்கும்.

கொரோனா தொற்றால் மாணவர்கள் முழுக் கல்வியாண்டும் கல்விப் பயில முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றுக் குறைந்தும் பள்ளிகள் திறக்காத சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாட்சாப் மூலமாவது வகுப்புகள் எடுப்பது ஓரளவிற்கு உதவியாக இருக்கும்.

எனவே, அரசுப் பள்ளி ஆசியர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசையும், கல்வித்துறையையும் வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வித்துறைச் செயலர், இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*