சேலம் முருகேசன் காவல்துறையினரால் கொலை: வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்!

சேலம் முருகேசன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்று (20.07.2021) தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:-

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் கடந்த 16.07.2021 அன்று சேலம் அருகேயுள்ள இடையப்பட்டி சிற்றூருக்குச் சென்று காவல்துறையால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து வந்ததின் அடிப்படையில் இக்கோரிக்கைகளைத் தாங்கள் உடனே நிறைவேற்ற வேண்டி இம்மனுவைச் சமர்ப்பிகின்றோம்.

சேலம் மாவட்டம், இடையப்பட்டி சிற்றூரைச் சேர்ந்த முருகேசன் (வயது 47) த/பெ. ஆறுமுகம் (மறைவு) என்பவர் கடந்த 22.06.2021 அன்று ஏதாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவரால் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு ஏதாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றமிழைத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றமிழைத்த காவல் அதிகாரி ஏதாப்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வழக்கை அக்காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்தால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயமும் நீதியும் கிடைக்காது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், இக்கொலை நடந்த போது சம்பவ இடத்தில் இருந்த மூன்று காவலர்களையும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வேண்டும்.

தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், பட்டப்பகலில் சீருடை அணிந்த காவல்துறையினரால் எவ்விதக் குற்றமும் செய்யாத அப்பாவி ஒருவரைக் கொலை செய்தது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேலும், இந்திய அரசியல் சட்டப்படி இக்கொலைக்குத் தமிழக அரசுக்கு முழுப் பொறுப்பு (Vicarious liability) உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசுக் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியான அரசு வேலை வழங்க வேண்டும். கொல்லப்பட்ட முருகேசனின் மூன்று பிள்ளைகளான கல்லூரியில் முதலாண்டு பட்டப் படிப்புப் படிக்கும் ஜெயபிரியா (18), +2 படிக்கும் ஜெயபிருந்தா (17), 8ஆம் வகுப்பு படிக்கும் கவிப்பிரியன் (13) ஆகியோரது படிப்புச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

மனித உரிமைகளைக் காக்க வேண்டி இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*