பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி பேராசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் தூ.சடகோபன், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேலுச்சாமி, செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராமமூர்த்தி, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் அர.அபிமன்னன், புதுச்சேரி பூர்வீக குடிமக்கள் பேரவை செயலாளர் பெ.ரகுபதி ஆகியோர் இன்று (14.04.2022) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை ஆகிய துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நுண்கலைத் துறையில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளைப் பின்பற்றி வண்ண ஓவியக்கலை (Painting), சிற்பக்கலை (Sculpture), பயன்பாட்டுக்கலை (Applied Arts) ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நிகழ்கலைத் துறையில் யு.ஜி.சி. விதிகளைப் பின்பற்றி இசை, நடனம் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்ப்பின்படி நுண்கலைத் துறையில் பயிற்றுவிக்கப்படும் பி.வி.ஏ., பி.எப்.ஏ., (B.V.A., B.F.A.) படிப்புகளுக்கு 2004ஆம் ஆண்டு முதல் தேசிய ஒழுங்குமுறை ஆணையமான (National Regulatory Authority) ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெறப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கப்பட்டுப் புதுப்பிக்க வேண்டும்.

பல்கலைக்கூடத்திற்குத் தகுதி இல்லாத, ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக பொறுப்பு முதல்வராக பி.வி.போஸ் நியமிக்கப்பட்டதால் இந்தக் கல்வியாண்டிற்கு ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற அவர் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்றால் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது என்பதால் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறார்.

ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெறவில்லை என்றால் நுண்கலைத் துறையில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகள் செல்லாததாகி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். பல்கலைக்கூடப் பொறுப்பு முதல்வரின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்து நுண்கலைத் துறை மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், நுண்கலைத் துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் யு.ஜி.சி. விதிகளின்படி பி.எச்.டி. பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

நுண்கலைத் துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படிதான் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள். மேலும், கடந்த காலங்களில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி முறையாக பத்திரிகைகளில் விளம்பரம் அளிக்கப்பட்டு, புதுவைப் பல்கலைக்கழக பிரதிநிதி அடங்கிய தேர்வுக்குழு (Selection Committee) மூலமே உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது யு.ஜி.சி. விதிகளின்படி உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டால் உள்ளூரில் படித்துவிட்டு வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு வேலைக் கிடைக்காது. ஆனால், பொறுப்பு முதல்வர் தனக்கு வேண்டியவர்களை வெளி மாநிலங்களில் இருந்து நியமிக்க இவ்வாறு விதிகளை மீறி செயல்படுகிறார் என்று பல்கலைக்கூட முன்னாள் மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே, முதலமைச்சர் இதில் தலையிட்டு பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு வரும் கல்வியாண்டிற்கான ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெறவும், நுண்கலைத் துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*