லலித் கலா அகாடமி அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரி அரிகரன் அரசு அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் சென்றது தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியான அரிகரன் பாரதியார் பலகலைக்கூடத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். இவர் கடந்த 2007, 2008 ஆண்டுகளில் அரசின் முன் அனுமதியின்றி அமெரிக்காவிற்கு பலமுறை சென்று வந்துள்ளார். அரசு ஊழியர்களின் நடத்தை விதிப்படி ஒரு அரசு ஊழியர் வெளிநாடு செல்ல முன் அனுமதி பெற வேண்டும் எனபது கட்டாயம்.

இதுகுறித்து அரசுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட புகார்களின் அடிப்படையில் அரசு ஏ.எப்.டி. பஞ்சாலையின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.டி.சுந்தரேசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை அதிகாரி உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த விசாரணை அறிக்கையில் அரிகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.

மேலும், அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வராக இருந்த போது பல்வேறு ஊழல், முறைகேடுகள், கையாடல், நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அரசு அப்போதைய உள்ளாட்சி துறை இயக்குநர் தேவநீதிதாஸ் மற்றும் கலெக்டர் ராகேஷ் சந்திரா ஆகியோர் தலைமையில் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளும் அவருக்கு எதிராகவே உள்ளன.

தவறிழைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் அவரை பாதுகாத்து வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கூட முதல்வராக இருந்த போது அவருக்கு எதிராக மிகப் பெரும் போராட்டம் நடத்தியதன் விளைவாகவே அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். அதன்பின் அவர் லலித் கலா அகாடமியின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற டிசம்பர் 1999 முதல் டிசம்பர் 2009 வரையில் எந்தவித பணியும் செய்யாத அவருக்கு அரசு 30 லட்சத்து 58 ஆயிரத்து 280 ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு குற்றமிழைத்த அதிகாரி அரிகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இக்கோரிகையை வலியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதியன்று சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*