மதிப்பெண்களைத் திருத்தி ஆசிரியர் நியமனத்தில் ஊழல், மோசடி: பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 16.06.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் தற்போது நடந்து முடிந்த ஒப்பந்த ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் மதிபெண்களைத் திருத்தி ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் 131 ஒப்பந்த ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 25.05.2010 அன்று இணையத் தளத்தில் வெளியிடப்பட்டன. இதன்படி பழனியம்மாள் என்பவர் பெற்ற மதிப்பெண் சதவிகிதம் 44.6203 ஆகும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள குமுதம் என்பவரது மதிப்பெண் சதவிகிதம் 43.7817 ஆகும். ஆனால், இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த பட்டியலுக்கு மாறாக கல்வித் துறை அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் பலரது மதிப்பெண்கள் திருத்தப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, மேலே கூறப்பட்டுள்ள பட்டியலின்படி பழனியம்மாள் பெற்ற மதிப்பெண் 44.6203 என்பதை 44.1203 என குறைக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குமுதம் பெற்ற மதிப்பெண் 43.7817 என்பதை 44.1817 என மதிப்பெண் கூடுதலாக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. இதனால், நியாயப்படி பழனியம்மாளுக்கு கிடைக்க வேண்டிய ஆசிரியர் பதவி மதிப்பெண் திருத்தப்பட்டதால் தன்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற குமுதம் என்பவருக்கு கிடைத்துள்ளது. இதேபோல், பலருடைய மதிப்பெண்கள் திருத்தப்பட்டு வேண்டியவர்களுக்குப் பதவி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பழனியம்மாள் 26.06.2010 மதியம் 2.00 மணிக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் நேரில் சென்று புகார் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித் துறை இயக்குநர் இணையதளத்தில் வெளியிட்டதில் தவறு ஏற்பட்டதாக கூறி, அவசரம் அவசரமாக இணையதளத்தில் இருந்த பட்டியலை மாற்றி மதிப்பெண் திருத்தப்பட்ட புதிய பட்டியலை மதியம் 4.00 மணியளவில் வெளியிட்டுள்ளார். அதுவரையில், ஏற்கனவே முடிவு வெளியிடப்பட்ட இணையதளப் பக்கத்தை கல்வித் துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

மேலும், இந்த மதிப்பெண் திருத்தியது குறித்து மாணவர் மற்றும் சமூக நல அமைப்புகள் கல்வித் துறை இயக்குநரிடம் எடுத்துக் கூறி ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியுள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கியுள்ளார். இதனால், ஆசிரியர் நியமனத்தில் ஊழல், முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுப்படுத்த இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்வித் துறை இயக்குநர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிப்பெண்களைத் திருத்தி வழங்கப்பட்ட ஆசிரியர் நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான, ஊழலற்ற முறையில் மீண்டும் தேர்வு நடத்தி ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மக்களைத் திரட்டி போரட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*