தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை – தமிழக முதல்வருக்குப் பாராட்டு!

சென்னையில் தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்படும் என திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழாவில் தாங்கள் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு என் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தந்தை பெரியார் அவர்கள் 95 வயது வரை தன் மூத்திர சட்டியைச் சுமந்து தமிழ்ச் சமுதாயம் தன்மானத்துடன் வாழ வேண்டுமென உழைத்தவர். மூட நம்பிக்கைகளை களைந்து பகுத்தறிவு வளர்த்தல், சாதி, மத, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி என அனைத்து தளங்களிலும் அயராது பணியாற்றி சமூகத்தில் ஆழமாக வேரூன்றியவர்.

மதவாத சக்திகள் கையில் எடுக்க முடியாத தலைவர் தந்தை பெரியார் என்பதும், இன்றைக்கும் அவர் எழுதிய இராமயண புரட்டு என்ற நூல் உத்தரபிரதேசத்தை உலுக்கிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மொழிப் போர் தியாகிகளுக்கு உதவிகள் வழங்குவது போல சாதி ஒழிப்பு போராளிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என தாங்கள் அறிவித்துள்ளதையும் மனதார பாராட்டுகிறேன்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், 04-12-2007 அன்று அனுப்பியுள்ள கடிதம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*