ஒரிசா – கருநாடக கிறித்துவர்கள் மீது தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கைகள்! (ஆங்கில வடிவம்)


ஒரிசாவில் விசுவ இந்துப் பரிசத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் கொலைச் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கிறித்துவர்கள் மீது இந்து மத வெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளன. தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. கன்னியஸ்திரிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கிறித்துவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அகதிகளாக முகாம்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருநாடகத்தில் இந்துமத வெறி ‘பஜ்ரங்தள்’ அமைப்பினர் மங்களூர், உடுப்பி, சிக்மங்களூர் ஆகிய மாவட்டங்களில் 17 தேவாலயங்கள், வழிப்பாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியாகப் போராட்டம் நடத்திய கிறித்துவர்கள், பாதிரியார்கள், கன்னியஸ்திரிகள் மீது கருநாடகப் போலீஸ் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து ஆந்திராவின் மனித உரிமை அமைப்புத் தலைவர் டாக்டர் கே.பாலகோபால் தலைமையில் இந்திய அளவிலான “உண்மை அறியும் குழு” ஒரிசா, கருநாடகம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. விரிவான அறிக்கை விரைவில் புத்தக வடிவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் கிறித்துவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துப் பரிசத், பஜ்ரங்தள், சிவசேனை, இராம சேனை…என பல்வேறு பெயர்களில் இந்து மதவெறி அமைப்புகள் சிறுபான்மை மக்கள் மீது கருத்து ரீதியாகவும், நேரடியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பா.ஜ.க. வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துப் பேசி வருகிறது.

உண்மை அறியும் குழு அறிக்கைகள் தரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளன. மனித உரிமையில் அக்கறை உடையவர்கள் யாராலும் இந்த காவிமயமான வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கில வடிவில் உள்ள இந்த அறிக்கைகள் “மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் மற்றும் கூடுதல் தகவல்கள் அடங்கிய சிறு வெளியீடு “மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” சார்பில் விரைவில் கொண்டு வரப்படும்.

அறிக்கையைப் படிக்க கீழேயுள்ள தொடர்பைச் சொடுக்கவும்:

ஒரிசாவில் கிறித்துவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

கருநாடகத்தில் கிறித்துவர்கள் மீது தாக்குதல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*