காரைக்காலில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்!

புதுச்சேரி முதல்வர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு இன்று (11.01.2014) மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள மனு விவரம்:

மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகிய நாங்கள் சென்ற 30.12.2013 அன்று காரைக்கால் சென்று அங்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுச் சம்பவம் பற்றி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விசாரித்ததின் அடிப்படையில் இம்மனுவைத் தங்களின் மேலான கவனத்திற்கும் உரிய நடவடிக்கைக்கும் சமர்பிக்கின்றோம்.

காரைக்காலில் சென்ற டிசம்பர் 24 அன்று இரவு தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக பாலியல் வன்புணர்வுச் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இச்சம்பவம் நடந்து குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து வைத்துக் கொண்டு காரைக்கால் நகர காவல்நிலைய அதிகாரிகள் சில அரசியல் கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக குற்றவாளிகளை விடுவிக்க பல லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன் காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்தோம். இத்தகவலின் அடிப்படையில் அவர் விரைந்துச் செயல்பட்டு காவல்நியைத்திற்கு நேரடியாக சென்று குற்றவாளிகள் 15 பேரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். உடனடியாக வழக்கு புலன் விசராணையை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார். அரசியல் அழுத்ததிற்கு அடிபணியாமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்த மோனிகா பரத்வாஜ் அவர்களை மனதார பாராட்டுகிறோம்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் மறைத்த காரணத்திற்காக காரைக்கால் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடாஜலபதி, தலைமைக் காவலர் சபாபதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை மூடி மறைத்து பேரம் பேசியதில் அக்காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் அவர்களுக்கு முக்கிய பங்குள்ளது என்பது எங்களது விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், இதுபோன்ற வன்புணர்வு வழக்குகளை விசாரிக்க வேண்டிய பொறுப்பு காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே, ஆய்வாளர் ராஜசேகர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இக்கொடிய சம்பவத்தை மூடி மறைத்தது என்பது சட்டப்படி குற்றமாகும். தற்போது வழக்கு விசாரணை மெற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றத்தை மறைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் கோணத்தில் விசாரணை செய்வதாக தெரியவில்லை. எனவே, காரைக்கால் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் வெங்கடாஜலபதி, தலைமைக் காவலர் சபாபதி ஆகியோர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 24 அன்று இரவு காரைக்கால் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நேரத்தில் இரண்டு முறை ஒரு பெண்ணைக் கடத்தி முதலில் இருவர், பின்னர் ஏழு பேர் பாலியல் வன்புணர்வுச் செய்துள்ளனர் என்பது போலீஸ் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதையும், போலீசார் பணியில் அலட்சியமாக இருந்ததையும் காட்டுகிறது. பாதுகாப்பு நிறைந்த நேரத்திலேயே ஒரு பெண்ணிற்கு கொடுமை இழைக்கப்பட்டுள்ளது என்பதால் இச்சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்பு என்பது தெளிவாகிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற பாலியல் வன்புணர்வு வழக்குகளில் உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளதைக் இங்குக் குறிப்பிடுகிறோம்.

டில்லி பாலியல் வன்கொடுமை வழக்குப் போல் புதுச்சேரி அரசும் ஒரு தனி நீதிமன்றம் அமைத்து வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். குற்ற வழக்குகளை நடத்தி அனுபவம் மிக்க சீனியர் வழக்கறிஞர் ஒருவரை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்து புலன் விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்குத் துணைப் புரியவும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்கள் இரு பெரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த அரசியல் கட்சிகள் பின்புலத்தில் இருந்து இச்சம்பவம் நடந்த உடனேயே வழக்குப் பதிவுச் செய்யாமல் இருக்க காவல்நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சாட்சிகளைக் களைக்கவும், சான்று ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதால் புலன் விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிறைக்குள்ளேயே வைத்து வழக்கு விசாரணையை முடித்து தண்டனைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பவம் நடந்த அன்று குற்றவாளிகள் அனைவரும் பிடிக்கப்பட்டு நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாக தெரிகிறது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரோடு இருந்த மற்றொரு பெண்ணும் எந்த காவல்நிலைய போலீசாரால் பிடிக்கப்பட்டு, எந்த காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும். அவர்கள் மீதும் குற்றத்தை மூடி மறைத்த குற்றத்திற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டில்லி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழாமல் தடுக்க புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்குக் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தலைவர் நியமிக்கப்படாததால் ஆணையம் செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது. மாநில மகளிர் ஆணையத்திற்குத் தலைவர் நியமனம் செய்து ஆணையம் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாங்கள் இம்மனுவைப் பரிசீலித்து, கோரிக்கைகளை நிறைவேற்றி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*