புதுவைப் பல்கலைக்கழகப் பதிவாளர் மாற்றத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குக் கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.10.2014) விடுத்துள்ள அறிக்கை:

புதுவைப் பல்கலைக்கழகப் பதிவாளரை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். .

புதுவைப் பல்கலைக்கழகப் பதிவாளராக ராஜீவ் யதுவன்ஷி ஐ.ஏ.எஸ். கடந்த 27.12.2013 அன்று மத்திய பணியாளர் நலத்துறை விதிகளின்படி நியமிக்கப்பட்டார். மத்திய அரசிடம் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெயர் பட்டியல் கேட்கப்பட்டு, அதிலிருந்து ராஜீவ் எதுவன்ஷி தேர்வு செய்யப்பட்டு பதிவாளராக நியமிக்கப்பட்டார்.

துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி பதவியேற்ற காலம் முதல் தொடர்ந்து ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதனைப் பதிவாளர் ராஜீவ் எதுவன்ஷி தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்குப் புகார் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை அளிக்க மூன்று பேர் அடங்கிய உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது.

இதேபோல், கடந்த ஜூலை மாதம் பதிவாளர் ராஜீவ் எதுவன்ஷியை திருப்பி அனுப்ப முயற்சித்த போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தலையிட்டு அதனை நிறுத்தி வைத்தது. 2009ல் மும்பை பல்கலைக்கழகத்தில் சந்திரா கிருஷ்ணமூர்த்தி  துணைவேந்தராக இருந்த போது அங்குப் பதிவாளராக இருந்த பேராசிரியர் வெங்கட்ராமனை பதவியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார். அப்போது மும்பை தீர்ப்பாயம் இந்த நடவடிக்கையை சட்டவிரோதம் என்று கூறி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. தன்னுடைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒத்துவராத அதிகாரிகளை மாற்றுவது என்பது சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், பதிவாளர் ராஜீவ் யதுவன்ஷியை திருப்பி அனுப்ப துணைவேந்தர் முடிவு செய்துள்ளது அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்பதோடு, தன் மீதான ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாகும். எனவே, விதிமுறைகளுக்கு மாறாகவும், தன்னிச்சையாகவும் பதிவாளரை திருப்பி அனுப்ப துணைவேந்தர் பிறப்பித்துள்ள உத்தரவை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.

துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி மீதான ஊழல், முறைகேடு விசாரணையை விரைவுப்படுத்தி அவரை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து புதுவைப் பல்கலைக்கழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*