ஜெயமூர்த்தி காவலில் கொல்லப்பட்ட வழக்கில் காவலர் புகார் ஆணைய உத்தரவைப் பின்பற்றி விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.06.2021) விடுத்துள்ள அறிக்கை:

விசாரணைச் சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் கொல்லப்பட்ட வழக்கில் காவலர் புகார் ஆணையம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசையும் காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 2018ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரைப் பாகூர் காவல் நிலைய போலீசார் பிடித்துச் சென்றனர். அவரைக் காவல்நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர், அதன்பின்னர், அவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குப் போட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலும் அவர் தாக்கப்பட்டதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர், அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துப் போனார்.

இவ்வழக்கில் அப்போதைய பாகூர் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், உதவி எஸ்.ஐ. திருமால், காலாப்பட்டு மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் காவலர் புகார் ஆணையம் உத்தரவின் பேரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதன்பின்னர். இவ்வழக்குப் பி.சி.ஆர். பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது இவ்வழக்கு விசாரணையை பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி. வீர.பாலகிருட்டிணன் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வழக்கின் விசாரணை அதிகாரி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். குற்றம்சாட்டப்பட்ட போலீசார், சிறைக் கண்காணிப்பாளர் என எவரையும் கைது செய்யவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தவுடன் வேறுவழியின்றி சரணடைந்தனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி குற்றம் நடந்து 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 07.08.2019 அன்று உயர்நீதிமன்றம் 4 மாதத்திற்குள் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், இதுநாள்வரையில் விசாரணை முடித்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் விசாரணையையே தொடங்காததால் பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தியின் மனைவி கெளசல்யாவிற்கு 1 லட்சம் ரூபாய் உடனே அரசு வழங்க வேண்டும். இத்தொகையை விசாரணையைத் தொடங்காத காவல் அதிகாரிகள் யாரென்று கண்டறிந்து அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்மீது விசாரணை மேற்கொண்ட காவல்துறை விசாரணை அதிகாரியான பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி., அப்போதைய சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் ஆகியோரின் சம்பளத்தில் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்துள்ளது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ. ஜெயகுருநாதன், உதவி எஸ்.ஐ. திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விசாரணையை முடித்து உரிய காலத்தில் குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்ய தவறிய, விசாரணையையே தொடங்காததால் ரூபாய் 50 ஆயிரம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டவருமான பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி. இவ்வழக்கை விசாரித்தால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்காது. எனவே, இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரியை மாற்றவும், மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள், சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோரைப் பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டுமென காவலர் புகார் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இம்மனு மீது விசாரணை மேற்கொண்ட காவலர் புகார் ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இராஜசூர்யா அவர்கள் கடந்த 05.05.2021 அன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில் வழக்கு விசாரணையை தற்போதைய விசாரணை அதிகாரியிடம் இருந்து மாற்றி வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்கவும், குற்றம்சாட்டப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்ததை மறுபரிசீலனைச் செய்யவும் டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., ஏடி.ஜி.பி., எஸ்.எஸ்.பி. (குற்றம் மற்றும் நுண்ணறிவு) ஆகியோருக்கு நேற்றைய தினம் மனு அளித்துள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*